14 மார்., 2011

ஜப்பானை தாக்கிய ஆழிப்பேரலை​களும்! சென்னையை தாக்கிய ஆழிப்பேரலை​யும்?!!!.....

11-மார்ச்-2011 இப்படியொரு வெள்ளிக்கிழமை ஜப்பானியர்களுக்கு விடியாமல் இருந்திருக்கலாம். 140 வருடங்களில் இல்லாத அளவிற்கு இயற்கையின் பேரழிவு சுனாமி என்ற ஆழிப்பேரலையின் வடிவில் ஜப்பானின் வடகிழக்கு நகரமான செண்டாயை தாக்கியுள்ளது.

8.9 ரிக்டர் அளவில் பெரும் நில நடுக்கத்தினையடுத்து 02:46 பிற்பகல் உள்ளூர் மணியளவில் முதலில் சுனாமி தாக்கியுள்ளது.
பின் தொடர்சியாய் அலையலையாய் தாக்கியுள்ளது அதனையடுத்து சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது.

இன்று அதிகாலையிலேயே சென்னையை ஒரு சுனாமி தாக்குகிறது என்ற செய்தி அறிந்து தொலைக்காட்சி முன் அமர்ந்தால் மதியம் ஜப்பானில் மிகக் கொடூரமான நில நடுக்கம் என்ற செய்தி உலக மக்களை எல்லாம் கவலைக்குள்ளாக்கியது.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் கொடூர பாதிப்புகளை பார்த்த அதிர்ச்சியில் உள்ளூர் செய்திகள் நம் மனதைவிட்டு நீங்கி விட்டது.

வாழ்நாளிலே எவரும் பார்த்திராத மனதை உருக வைக்கும் காட்சிகளாக தொடர்ந்து வருகிறது. வானத்தில் பறந்து கொண்டே நகரின் அழிவினை காணொளியில் பதிவு செய்து நேரடியாக அனைத்து தேசிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.

கற்பனைக்கு எட்டாத அழிவுகள். நகரத்திற்குள் புகுந்த சுனாமி ஆழிப்பேரலை கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, மார்பில் ஒன்று என அப்பிக் கொண்ட பிள்ளைகளை ஊருக்கு அழைத்துச் செல்லும் அவசர தாய் போல அரித்து கொண்டு செல்கிறது, இருப்பிடம் மாற்றி கொண்ட கடல் நகரத்திற்குள் புகை போல பரவியது, அது பயணிக்கும் எல்லா நிலப் பரப்புகளையும் தனது வடிவமாகவே மாற்றுகிறது. நகரமே நகர்ந்து செல்கிறது. வீடுகளும்,மாளிகைகளும், கட்டங்களும், வாகனங்களும், படகுகளும் மென்று தின்ற சக்கைகளாக, மந்திரத்திற்கு கட்டுப்பட்டு ராட்ச ஆழிஅலைகளுடனே மறு பேச்சின்றி பயணிக்கிறது.

கடலலைகள் பயணிக்கும் முன்னர் அது கட்டடமாகவும், வாகனமாகவும், மனிதனென்றும் ,மிருகமென்றும் மரமென்றும் தனித் தனியாய் இருந்தது, கடல் அலைகள் அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்து ஒரு நாசகர கொள்ளைக்காரனாய் அனைத்தையும் இழுத்துக் கொண்டு செல்கிறது. பேரலை கடந்து போகும் இடமெல்லாம் உயிர் எது, உடல் எது ,வலி எது என்று எதுவுமாய் இல்லாமல் ஒரு பரமபொருள் திராவக கலவையாக அலைந்து அலைந்து அழித்து எடுக்கிறது.

ஜப்பானின் பல நகரங்கள் மிதக்கும் தண்ணீர் கலவை ஆனது. ஒரு பக்கம் பேரலை நீரின் அடித்து துவைக்கும் ஆக்கிரமிப்புகள், இன்னொரு பக்கம் உருவங்களை உருக்குலைத்து குழுக்கி எடுக்கும் நிலநடுக்கங்கள், உயரங்கள் எல்லாம் குப்பைகளாகவும் இரத்தங்களாகவும் சிதைந்து கிடக்கிறது. கட்டடங்கள் எல்லாம் குழந்தைகளின் தொட்டில்களாய் ஆடுகிறது.

கழுத்தளவு தண்ணீரில் மிதக்கும் போது தலையில் நெருப்பு பற்றி எரிவது. போன்ற வினோத காட்சிகள், சுற்றிலும் சுனாமி வெள்ளம் அடித்து செல்கிறது, நகரங்கள் பற்றி எரிகிறது. கோபுரங்கள் மண்ணானது, மண்ணெல்லாம் தண்ணீரானது அது மக்களின் கண்ணீரானது. நில நடுக்கத்தை தொடர்ந்த தீ விபத்துக்களால் பற்றி எரியும் நகரங்கள், உடைந்து நொருங்கும் கட்டிடங்கள், அடித்துச் செல்லும் சுனாமி ஆழிப்பேரலை என்று எல்லா வகையிலும் அந்த சின்னஞ் சிறு நாட்டிற்கு பேராபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் மின் உற்பத்திகளில் முக்கிய பங்களிக்கும் ஐந்து அனுமின் நிலையங்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று வெடித்து அணுக் கதிரியக்கத்தை வெளியேற்ற ஆரம்பித்து விட்டது. புவிஅதிர்வுகளையும், சுனாமி அலைகளையும் கடந்து உயிர் பிழைத்த மக்கள் அடுத்து அணு உலைகள் வெளிப்படுத்த இருக்கும் கதிரியக்கத்தை நினைத்து அச்சமடைய வேண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாய் வெளியேறி வருகின்றனர். சுற்றிலும் தண்ணீர் மரணம் சூழப்பட்டபோது மிஞ்சி இருக்கும் மக்கள் எந்த திசைகளும் இனி தன் உயிரை காப்பாற்ற போவது இல்லை என்ற நிலையில் அறுக்கபோகும் ஆட்டு குட்டியைப் போல மிரண்டு அங்கேயே நிற்கின்றனர்...

வானிலிருந்து பார்க்கையில் தரையில் பரவும் ஒரு திரவமாக நகரத்தை அரித்து செல்கிறது. இழுத்து செல்லும் தண்ணீர் கலவையில் எத்தனை உடல்களும், உயிர்களும், உறவுகளும், பாசங்களும், ஆணவங்களும், கனவுகளும் மிதக்கின்றன என்பதை யார் அறிவார்?...

பாதசாரிகள் முதல் நாடாளும் பிரதமர் வரை எல்லோரும் மரணத்தை அருகில் பார்த்த அதிச்சியில் உறைந்து போய் உள்ளனர். இறந்தவர்களை விட படுகாயம் பட்டு உயிர் பிழைத்தவர்களின் துயரம் பெரும் கொடுமை, அன்பானவர்களை இழந்து அனாதையாய், உணவின்றி, உறைவிடமின்றி, தூக்கமின்றி, எந்த அடிப்படை தேவைகளும் இன்றி மீண்டும் ஒரு முறை இந்த உலகத்தில் தன் இருப்பை பதிவு செய்யபோகும் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது.

அத்தனை பேரிடர்களுக்கு பின்னும் பல உயிர்களை பறிகொடுத்தும், மிகவும் மனத் தைரியத்துடன் வாழ்கையை தொடங்குவதற்கு மீண்டும் தன் நாட்டை உலகத்தின் முன்னோடி நாடாய் மீண்டும் புணரமைக்க போராடிவரும் ஜப்பானிய மக்களின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு துணையாய் உலக நாடுகள் முன்வரவேண்டும்.

சுனாமி என்ற வார்தையே ஜப்பானியர்களுடையது தான். இதுவரை 195 முறையேனும் அவர்கள் சுனாமி பேரழிவுகளை சந்தித்து வந்திருப்பார்கள். ஜப்பானிய மக்கள் தங்களது இளம் வயதிலிருந்தே இயற்கை இடர்பாடுகளுக்கிடையே வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக மனதளவில் எப்பொழுதுமே தங்களை தயார் நிலையிலேயே வைத்துகொள்கிறார்கள். அவர்களின் கட்டங்களும், உள்கட்டமைப்புகளும் இயற்கை போரழிவுகளுக்கு தாக்குபிடிக்கும் விதமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதன் இயற்கையின் ஆதிக்கத்தின் பிடியில் செயலற்றவனாய் முடங்கிவிடுகிறான்.

ஓய்வறியாது எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கும் ஜப்பானை இன்று ஆழியலை எந்த ஒரு வரையரையும் இல்லாமல் இயக்கிவருகிறது.
மரணம் எப்பொழுதும் வரலாம் என்ற போதும் தங்களின் தன்னம்பிக்கையினாலும் விடா முயற்சியினாலும் அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிலப்பரப்பில் மிகவும் குட்டி நாடென்றாலும், இயற்கை அழிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்று உலகில் பயன்படுத்தும் எல்லா மின்னனு பொருட்களும் கார்களும் ஜப்பானியர்களுடையது, எல்லா நூற்றாண்டுகளுக்குமான தொழில் நுட்பத் தாய் ஜப்பான். மீண்டும் துளிர்த்தெழும் ஜப்பான் தன்னம்பிக்கையோடு...

இன்னொரு சுனாமி சென்னையை தாக்கியதாய் குறிப்பிட்டு இருந்தேன் அது வேறெங்கும் இல்லை முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் புகுந்த சிபிஐ வேட்டை தான்.

ரொம்ப நாளாய் தாய் வீட்டிலேயே இருக்கும் கனிமொழியை மாமனார் வீட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.

சி.பி.ஐ அதிகாரிகள்., டிபி ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை காலையிலேயே விசாரிக்கத் தொடங்கினர். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளின் உரிமையாளர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாவும் விசாரிக்கப்பட்டார். இதே கனிமொழியை வைத்து தான் 63 தொகுதிகளையும் மிரட்டி வாங்கியது காங்கிரஸ், இப்பொழுது எந்தெந்த வெற்றித் தொகுதிகள் வேண்டும் என்று செல்லமாய் மிரட்டுவதற்காக இந்த சிபிஐ சுனாமி இருக்கலாம், இல்லை உச்ச நீதிமன்றம் போட்ட போடில் சென்னையை முற்றுக்கையிட்டிருக்கலாம் சிபிஐ.

ஆக மொத்தம் உள்ளூரில் ஒருவனை அடிபணிய வைப்பதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் இல்லை என்றால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவார்கள். அது போலத்தான் இங்கு சிபிஐயை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தனது அடியாள் போல் வைத்துள்ளது.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து கருணாநிதி ஒரு சுனாமி ஒன்றை டெல்லி நோக்கி அனுப்பினார். சமிபத்தில் சென்னையை கலங்கடித்த சுனாமி காங்கிரஸிடமிருந்து திருப்பி விடப்பட்டது. தமிழுக்காக சாவேன் என்று இடியாய் முழங்கிய தலைவன். மனிதகுல விரோதி ராசபக்சே தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்த போதும் காங்கிரஸுடன் கை கோர்த்து உல்லாசமாய் திரிந்த தமிழ் இனத் தலைவன் தன் குடும்பத்திற்குள் புகுந்த சுனாமியால் இன்று தகர்ந்துபோய் கிடக்கின்றார்.

இனி அடுத்தடுத்து வரப்போகும் சுனாமிகளை நினைத்து நடுங்கி போய் உள்ளார் கருணாநிதி. இது வழக்கமான அரசியல் மோடி வித்தைகள் தான். மற்றபடி இந்தியர்களுக்கு ஊழல் சுனாமிகள் புதுமையானது ஒன்றும் இல்லை, ஜப்பானியர்கள் எப்படி இயற்கை சீரழிவுகளுடன் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்களோ அதே போல் இந்தியர்களும் தங்களை சூழ்ந்துள்ள ஊழல் சுனாமிகளுக்குள்ளேயே சகித்துக் கொண்டு வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது இயற்கை பேரழிவு ஏற்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்களை கொண்டது இந்தியா, அதில் தான் உலகளவில் பட்டினிச் சாவுகள் அதிகமாக நடைபெறுகிறது. உணவு உற்பத்தியில் அதிகமாக இருக்கும் இந்தியாவில்தான் உணவிற்கு பதிலாய் எலிகளை மற்றும் மலத்தை திண்ணும் கொடுமையும் நடக்கிறது.

தொழிற் துறைகளில் முன்னோடியாய் இருக்கும் நம் நாட்டில் தான் வேலையின்மை அதிகமாய் இருக்கிறது. நடுத்தர மக்களை பிச்சைக் காரர்களாக மாற்றும் இந்த சமூகத்தில் தான் உலகமே அதியசயக்கும் ஊழல்களும், பதுக்கி வைக்கப்படும் கருப்பு பணங்களும் உள்ளது.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகி கொண்டே வருகிறது. மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது பேரழிவுகள் நிச்சயமாக நடைபெறும்.

இந்தியாவில் சமீபத்திய ஊழல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக ஊழல் அளவுகோல்களில் பதிவாகியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பசி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விரக்தி, ஆதிக்க, அதிகார மையங்களின் வேட்டை, கேலி கூத்தாகும் ஜனநாயக மாட்சிமை என வாழ்கையை சூன்யமாக்கும் பல சுனாமிகளை இந்தியாவும் தினம் தோறும் சந்தித்து வருகிறது.

எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் என்பது உறுதி அதற்குள் நாம் இந்த சமூகத்தில் எப்படியான வாழ்கையை நாம் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது நம் கடமை.

ஒவ்வொருவருக்குள்ளும் உற்பத்தியாகும் சுனாமி ஒருசேர கொதித்தெழும் பொழுதுதான் சமூகப் புரட்சி எனும் சுனாமி உருவாகும்.

மால்கம்-X ஃபாரூக்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "ஜப்பானை தாக்கிய ஆழிப்பேரலை​களும்! சென்னையை தாக்கிய ஆழிப்பேரலை​யும்?!!!....."

பெயரில்லா சொன்னது…

very good comparisonand article

பெயரில்லா சொன்னது…

Masha Allah , nice article

Vazhthukkal Farook avargale.

பெயரில்லா சொன்னது…

கருத்துக்கள் நிறைந்த பதிவு.

கருத்துரையிடுக