24 ஏப்., 2010

17 வயது இளம்பெண் கடத்தப்பட்டு இன்னொருவருக்கு மனைவியாக விற்பனை

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள நிஜாகோன் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் மேமி காதூன். இவர் தன் உறவினர்களுடன் டெல்லிக்குச் சென்ற இடத்தில் பெண்ணொருவரால் கடத்தப்பட்டு தலித் ஒருவருக்கு மனைவியாக விற்கப்பட்டார்.

கடத்தப்பட்ட மேமி காதூன் டெல்லி வழியாக ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் உள்ள போஞ்சாடா என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு தலித் இனத்தைச் சேர்ந்த 40வயது பரஸ்முக் லால் பைர்வா என்பவருக்கு 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டார்.

பைர்வாவுக்கு மனைவியாக இருக்கும்படி இவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அங்கு பல இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளார். இவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய இவர் அந்தப் பகுதியில் இருந்த முஸ்லிம் குடும்பங்களை அணுகி தன்னைக் காப்பாற்றக் கோரினார். அவர்கள் இப்பெண்ணைக் காப்பாற்றி, ராஜஸ்தான் பல்கலைக் கழக மகளிர் சங்கத்தால் நடத்தப்படும் சக்தி ஸ்டம்ப் என்ற இல்லத்தில் தங்க வைத்தனர்.

சனிக்கிழமை (24-04-2010) அன்று மகளிர் அமைப்பினர் பத்திரிகையாளர்கள் முன் ஆஜர்படுத்தினர். அப்போது மேமி கூறியதாவது:

"நான் என்னுடைய உறவினர்களுடன் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த ஒரு பெண் தந்த பிஸ்கட்டை சாப்பிட்டு மயக்கம் அடைந்துவிட்டேன். அதன் பின் நடந்தவை எனக்குத் தெரியாது. உணர்வு திரும்பி கண் விழித்துப் பார்த்த போது போஞ்சாடா கிராமத்தில் இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது என்னை அவர்கள் விலைக்கு வாங்கிவிட்டதாகவும், பாரஸ்முக்குடன் நான் வாழ வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தனர் என்று கூறினார்.

என்னுடைய தாயாருக்கு தொலைபேசி மூலம் பேசி, நான் என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் ஒரு முஸ்லிம் ஆணை திருமணம் செய்து கொண்டதாகவும் கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூற வற்புறுத்தினார்கள். அந்த வீட்டைவிட்டு வெளியேற என்னை அனுமதிக்கவில்லை. 40 வயது பாரஸ்முக்குடன் உடலுறவு கொள்ள நான் நிர்பந்திக்கப்பட்டேன்." என்று மேமி குற்றம் சாட்டினார்.

மேலும் அந்தக் கிராமத்தில் தன்னைப் போன்று நான்கு அல்லது ஐந்து பெண்களும் இவ்வாறு இருப்பதாகவும் மேமி கூறினார். டெல்லியில் எனக்கு பிஸ்கட் தந்து மயக்கிய அந்தப் பெண் பாரஸ்முக் வீட்டினருடன் நல்ல தொடர்பில் இருப்பதாகவும் அந்தப் பெண்தான் இளம் பெண் கடத்தலில் முக்கிய நபராக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாகவும் மேமி கூறினார்.

இளம் பெண் கடத்தலில் தொடர்புடையோரைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தேசிய முஸ்லிம் பெண்கள் முன்னேற்றச் சங்கத்தினரும் கோரி உள்ளனர். இது தொடர்பாக ஜெய்ப்பூர் காந்தி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "17 வயது இளம்பெண் கடத்தப்பட்டு இன்னொருவருக்கு மனைவியாக விற்பனை"

கருத்துரையிடுக