புதுடெல்லி:விவசாய அமைச்சர் சரத் பவார், சி.பி.எம். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட், காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்களின் டெலிபோன் உரையாடல் மத்திய அரசால் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பிரபல ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கார்கில் போருக்கு பிறகு துவக்கப்பட்ட நேசனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேசன் தான் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக 'அவுட் லுக்’ வார இதழின் புதிய பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் விவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் சரத் பவார் ஐ.பி.எல் சேர்மன் லலித் மோடியுடன் கடந்த நாட்களில் பேசிய டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெறும் வேளையில்தான் அவர்களுடைய செயல்பாடுகளை அறிவதற்காக சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட்டின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றபொழுது காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இதே ஆண்டில்தான் கோஸி நதிக்கு நிதி ஒதுக்கீடுச் செய்யவேண்டும் என்று நிர்பந்தித்த வேளையில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் டெலிபோன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
செல்ஃபோன், லேண்ட் ஃபோன், இண்டர்நெட் ஃபோன் ஆகியவற்றிலிருந்து பேசிய உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி, சி.பி.ஐ தலைவர் டி.ராஜா, பா.ஜ.க ராஜ்யசபை துணைத்தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூறினர்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். தனிநபர் சுதந்திரத்திற்கும், அந்தரங்கமான விஷயங்களுக்கும் கேடுகளை விளைவிக்கும் ராணுவ ஆட்சி நடைபெறும் நாட்டிற்கு சமமாக நடந்துக் கொண்ட முறைக்கு மத்திய அரசை பதில் கூறவைப்போம் என சி.பி.ஐ யின் டி.ராஜா தெரிவித்தார்.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிரகாஷ் காரட் கடும் கண்டனம் தெரிவித்தார். வருகிற திங்கள் கிழமை பாராளுமன்றம் கூடுகிறது. இவ்விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சரத்பவார், பிரகாஷ் காரட் டெலிபோன் உரையாடலை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக ஆங்கில பத்திரிகை ’அவுட் லுக்’ தகவல்"
கருத்துரையிடுக