டெஹ்ரான் ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.
ஜி-15 வளரும் நாடுகளின் உச்சி மாநாடு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா டெஹ்ரான் சென்றுள்ளார். அங்கு அவர் ஈரான் அதிபர் அகமது நிஜாத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் உரையாடினர்.
இருதரப்பு உறவுகள் குறித்தும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும் இருவரும் பேச்சுகள் நடத்தினர். இந்தியாவும் ஈரானும் எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என ஈரான் அதிபர் நிஜாத் விருப்பம் தெரிவித்தார். ஜி-15 நாடுகள் அமைப்பிலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பிலும் இந்தியா முக்கிய பங்காற்றி இருப்பதாக பேச்சுகளின் போது அகமதி நிஜாத் குறிப்பிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நிஜாத் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது எஸ். எம். கிருஷ்ணா, தன்னை சிறப்பாக வரவேற்றதற்காக அகமதி நிஜாத்திடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஈரானுடன் இந்தியாவுக்கு உள்ள கலாசாரத் தொடர்புகள் குறித்தும் கிருஷ்ணா நினைவு கூர்ந்தார். ஜி-15 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஈரான் சிறப்பாக செய்துள்ளதாகவும் எஸ்.எம். கிருஷ்ணா பாராட்டுத் தெரிவித்தார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா"
கருத்துரையிடுக