12 ஜூலை, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ் மாநில தலைவரின் கோரிக்கை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா நியுமேன் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோசப், முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக போற்றும் நபிகள் நாயகம்[ஸல்] அவர்களை அவமதித்து தூற்றும் விதமாக [மேற்கத்திய பாணியில்] தேர்வு வினாத்தாளை தயாரித்தார். இவரின் இந்த விஷயம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் புண்படுத்தியதோடு முஸ்லிம்களின் மனதில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்தியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறை சாற்றும் விதமாக இந்தியாவில் சகோதர பாசத்துடன் இருந்துவரும் முஸ்லிம், இந்து, கிருஸ்தவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் மேற்கத்திய பாணியிலான முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை, முஸ்லிம் விரோத புத்தகங்கள் போன்ற செயல்கள் இப்போது இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் அதிகரித்து வருகின்றன.

இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், சமூகங்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் இச்செயல்கள் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீண்ட காலமாக கூறி வருகிறது. ஆனால் அரசோ இவ்விஷயங்களில் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றது. இதனிடையே மேற்குறிப்பிட்ட வினாத்தாள் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சிலரால் தாக்கப்பட்டார். இத்தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது போன்ற செயல்பாடுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிலைபாட்டிற்கு எதிரானது என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், இச்செயலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து விதத்திலும் ஒத்துழைக்கும் என்றனர். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்திடும் நோக்கோடு செயல்பட்டு வரும் சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் புனைந்து வருகின்றனர். அவர்களின் கட்டுகதைகளையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளாமலும், அவர்களின் கருத்துக்களை கேட்காமலும், தங்களின் கற்பனை குதிரைகளை காவல்துறையின் கட்டுக்கதைகளோடு சேர்த்து ஓடவிட்டு வருகின்றனர்.

அல்கொய்தா தொடர்பு, தாலிபான்கள் தொடர்பு, அமெரிக்க பெண்கள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு சூடேற்றப்பட்ட இரும்பின் மீது இடுதல் போன்ற சிடிக்கள் இருந்தாக கோயபல்சை மிஞ்சும் காமெடிகளை செய்திகளாக்கி வருகின்றனர் சில தமிழ்ப்பத்திரிகைகள். தமிழகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இன்று செல்லாக் காசாகி நிற்கின்றனர் தமிழக காவல்துறையினர்.

தமிழகத்தின் நெல்லிக் குப்பத்தில் 22-10-2004 அன்று நடந்த சிறு கைகலப்பை சர்வதேச பிரச்சனையாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி தன் ஹீரோயிசத்தை காண்பிக்க முயற்சித்தார் நெல்லிக்குப்பத்தின் அப்போதைய எஸ்.பி. பிரேம்குமாரால் [பின்னர் வேறொரு வழக்கில் அரசால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்] அப்போதும் அல்கொய்தா தொடர்பு சிடிக்கள் சிக்கின, அரபி எழுத்துக்கள் பதிக்கப்பட்ட செல்போன்கள் பறிமுதல் என ஒரு காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஊடகங்களும் அதற்கு துணை நின்றன.

மீண்டும் 22-06-07 அன்று கோவை நுண்ணறிவு பிரிவு ஆணையர் 'ரத்னசபாபதி' பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி கோவையில் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டார். அங்கும் சிடிக்கள், பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்காக வைத்திருக்கும் இந்திய வரைபடம் [India Map] கிரைண்டருடைய கண்டென்ஸர் [Grinder Condenser] சுவிட்ச், வயர் என கடை விரித்து லண்டன் குண்டு வெடிப்போடு முடிச்சு போடும் காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. பின்னர் அரசு நியமித்த விசாரணை கமிஷன், இவை அனைத்தும் ஒரு நாடகமென தீர்ப்பளித்தது.

இந்த நாடகம் மற்றும் விசாரணை அறிக்கை இப்பொழுது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. அதே பாணியிலான செயல்கள் கர்நாடகத்திலும், கேரளத்திலும் நடந்து வருவது தொடர்கதையாகி விட்டது. ஊடகங்களோ உண்மை என்ன என்பதை கண்டறியாமல் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கதைகளையே பரப்பி தங்களுக்கு தாங்களே களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கின்றது. கேரளாவில் பேராசிரியர் தாக்கப்பட்ட உடன் தன் கண்டனத்தை பதிவு செய்த பாப்புலர் ஃப்ரண்ட், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், போலிஸார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களுக்கு எதிரான அராஜக போக்கை கைவிட்டு அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதைவிட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். பத்திரிகைகளும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 9 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளத்தின் கோழிக்கோட்டில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேரளாவில் இதற்கு முன்பு மாராடு படுகொலைகளிலும், கோழிக்கோடு பேருந்து நிலைய குண்டு வெடிப்பு வழக்குகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'NDF'] பின்னணி என ஊடகங்கள் எழுதின. பின்னாளில் அந்த சம்பவங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என நிரூபிக்கப்பட்டது. அதே போன்று இந்த சம்பவத்தையும் பத்திரிகைகள் கையாண்டு வருவதாகவும், காவல் துறையில் உள்ள முஸ்லிம் சமூக விரோத சக்திகளே இதற்கு காரணம், அவர்களையும், போலியான செய்திகளை பரப்பி வருபவர்களையும் சட்டரீதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்கொள்ளும். மேலும் குறுகிய எண்ணத்துடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட பேராசிரியரின் செயலை ஜனநாயக முறையில் கண்டித்தவர்களை கைது செய்து அவர்களின் வீடுகளில் புகுந்து சிடிக்கள் மற்றும் குர்ஆன்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு இரகசிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறுவது அபாண்டமானது மேலும், இதில் கிஞ்சிற்றும் உண்மையில்லை.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் நீதியுடனும் நடுநிலை தவறாமலும் நடந்து கொள்ள வேண்டும், என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்;. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழுவும் நடந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்ததுடன் காவல் துறை மற்றும் ஊடகங்களும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தமிழக பத்திரிகைகளும் தங்களின் பழைய கால அனுபவங்களை மறந்து மீண்டும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுக்கதைகளை பரப்புவதை நிறுத்தி நடுநிலையுடன் செயல்பட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ் மாநில தலைவரின் கோரிக்கை"

கருத்துரையிடுக