2 ஆக., 2010

மரண தண்டனை தொடரவேண்டுமா?

ஆக,2:இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலும் ஒழிப்பதா, வேண்டாமா என்ற விவாதம் பல மட்டங்களிலும் நடைபெறும் வேளையில் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய தேசிய மனித உரிமைகள் தலைவருமான கே.ஜி.பாலகிருஷ்ணன் மரண தண்டனையை நீக்குவது கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தனது சொந்த கருத்து என்றும் மனித உரிமைகள் அமைப்பின் கருத்தாக இதனை ஒரு போதும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

"மனித உரிமை ஆணையம் மரணதண்டனை பற்றி கருத்து கூறுவது முறையாகாது. ஆனால் என்னை சொந்தக் கருத்தை கேட்டீர்கள் என்றால், மரண தண்டனை தொடரவேண்டும் என்பதே, அது சமூகத்தில் ஒரு பயத்தை தக்கவைக்கும்." என்றார்.

இந்தியாவில் பல்வேறு விதமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மரணதண்டனை தொடர்வதே நல்லது என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்.

இந்தியாவில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004ஆம் ஆண்டு. கொல்கட்டாவில் 14 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தனஞ்ஜய் சாட்டர்ஜீ என்ற குற்றவாளிக்கு கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

"மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அந்தத் தண்டனைக்கு அந்த குற்றவாளிகள் உரியவர்களே என்பது புரியவரும்." என்று பாலகிருஷ்ணன் கூறினாலும், உச்சநீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பை அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே பிரயோகிக்கவேண்டும் என்பதை ஒரு கொள்கை அளவில் கடைபிடித்து வருகிறது என்றார்.

கீழ் கோர்ட், மேல் கோர்ட், உச்சநீதிமன்றம் என்று மரணதண்டனை ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டாலும் அவருக்கு கருணை மனு என்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மரண தண்டனை தொடரவேண்டுமா?"

கருத்துரையிடுக