11 பிப்., 2011

விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்கள்!

"வீடுகளிலிருந்தும், மக்களிலிருந்தும் அகற்றப்பட்டவர்கள் நாங்கள். இறைமார்க்கத்தில் யுத்தம் புரியாமலிருக்க எங்களுக்கு இனி என்ன நியாயமுள்ளது?"

ஊர்க்காரர்களின் பிரதிநிதிகள் ஷம்வீல்(சாமுவேல்) என்ற இறைத்தூதரிடம் கேட்ட கேள்விதான் இது.

தங்கள் நாட்டைக் கைப்பற்றி அக்கிரமங்கள் புரியும் ஜாலூத் (கோலியாத்) என்ற அரசனுக்கெதிராக உதவி தேடி வந்தவர்கள் இவர்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராகப் போர் புரிய அவர்கள் தயாராக இருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு அனைவருக்கும் பொதுவான ஓர் ஆள் வேண்டும். இறைத் தூதர்கள்தான் பொதுவாக இஸ்ரவேலர்களுக்கு தலைவர்கள். ஆனால் இறைத்தூதர் ஷம்வீல் வயதானவராக இருந்தார்.

அவருக்கு ஆண் குழந்தைகளுமில்லை. இந்தக் குறையைப் போக்க வல்ல இறைவனிடம் இறைஞ்சும்படி ஊர்க்காரர்கள் இறைத்தூதர் ஷம்வீலிடம் கோரினர். இஸ்ரவேலர்களின் பரஸ்பர துவேஷத்தையும், ஒற்றுமையின்மையையும் நன்கறிந்திருந்த ஷம்வீல் அவர்களிடம் இவ்வாறு கேட்டார்:

"அல்லாஹ் உங்களுக்கு ஒரு தலைவரை நியமித்து, அவர் உங்களைப் போர் புரிய அழைத்தால் நீங்கள் அதற்கு தயாராகாமல் இருப்பீர்களா?"

இது கேட்டு இஸ்ரவேலர்கள் கொதித்தனர். கொடுங்கோன்மை அரசன் ஜாலூத்தின் கொடுமைகளுக்குப் பலியாகி குடும்பங்களும், சொத்துகளும் அழிந்துவிட்ட தங்களிடம் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை, அச்சப்படவும் ஒன்றும் இல்லை என்று அவர்கள் பதிலளித்தனர்.

ஊர்க்காரர்களின் இந்த ஆவேசத்தை அங்கீகரித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இறைத்தூதர் ஷம்வீலுக்கு ஏற்பட்டது. அவர்கள் செய்த பிரார்த்தனையின் பலனாய் தாலூத் என்பவரை அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு தலைவராக நியமித்தான்.

ஆனால் இதனை ஜீரணிக்க முடியாமல் இஸ்ரவேலர்கள் திணறினார்கள். தங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட தலைவர்களும், சமுதாயப் பிரமுகர்களும் இருக்க ஒன்றுமில்லா தாலூத்தைப் போய் அல்லாஹ் நமக்குத் தலைவராக ஆக்கியிருக்கின்றானே என்று அவர்கள் அதிருப்தியுற்றனர்.

அறிவிலும், பலத்திலும் முன்னில் நிற்பவர்தான் தாலூத் என்று அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. ஊர்க்காரர்களுக்குத் தெளிவு படுத்தும் விதமாக வேறு சில ஆதாரங்களையும் தாலூத்திற்கு அனுகூலமாக இறைத்தூதர் ஷம்வீல் கொண்டுவந்தார்கள்.

இருந்தாலும் சிலர் நக்கல் அடித்துக்கொண்டிருந்தனர். தன்னை அங்கீகரித்தவர்களை ஒருங்கிணைத்து தாலூத் ஜாலூத்தை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டார். மிக நீண்ட தூரம் பயணித்தது அந்தப் படை.

வழியில் ஒரு நதி குறுக்கிட்டது. அந்தச் சமயம் அவர்களின் குணநலன்கள் சோதிக்கப்பட்டன. நதியில் யாரும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது கட்டளை. பொறுக்க முடியாத தாகம் உள்ளவர்கள் ஒரு கையளவு மட்டும் நீர் அருந்தலாம். அதற்கு மேல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தக் கூடாது. இதுதான் சோதனை.

பெரும்பாலானவர்கள் இந்தச் சோதனையில் தோற்றுப் போயினர். மீதியுள்ளவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு தாலூத் ஜாலூத்துடன் போர் புரிய புறப்பட்டார்.

ஜாலூத்திடம் ஒரு பெரிய படை இருந்தது. பலஹீனமான மிகச் சொற்ப நபர்களுடன் தாலூத் மறுபக்கம். உறுதியான இறைநம்பிக்கையும், இறையுதவியும்தான் அவர்களின் முக்கிய ஆயுதங்கள்.

ஜாலூத்தின் பெரும் படையைப் பார்த்ததும் அந்தச் சொற்ப நபர்களிலும் சிலர் நம்பிக்கையிழந்து நின்றனர். "ஜாலூத்துடன் போரிடுவதற்கு நமக்குப் பலம் போதாது" என்று அவர்கள் கூறினர்.

ஆனால் இறைநம்பிக்கையில் உறுதியுடன் இருந்த மீதி நபர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: "எத்தனையோ சிறு படைகள் வல்ல இறைவனின் உதவியால் எத்தனையோ பெரும் படைகளை வெற்றி கொண்டிருக்கின்றன. நிலைகுலையாமல் கால்களை உறுதிப்படுத்தி நிற்பவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்."

தீமைக்கெதிராக யுத்தம் புரிபவருக்கு அடிப்படைப் பாடத்தைக் கற்பித்துத் தரும் வகையில் அருள்மறை இந்த நிகழ்வைக் கூறிக் காட்டுகிறது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான விடுதலைப் போராட்டம் இறைமார்க்கத்தில் நடத்தப்படும் போராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட விடுதலைப் போராட்டங்கள் சமமான இரு படைகளுக்கிடையில் நடந்ததாக சரித்திரத்தில் நாம் எங்கும் காண முடியாது. மாறாக, பலஹீனமான சமூகங்கள் எத்தனையோ பலமான சமூகங்களைப் போராடி வெற்றி கொண்ட நிகழ்வுகள்தான் வரலாறு நெடுகிலும் வாகாய் மின்னிக்கொண்டிருக்கின்றன.

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்
தமிழில் : MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்கள்!"

கருத்துரையிடுக