11 ஏப்., 2010

ரஷ்யாவில் விமான விபத்து – போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவின் மேற்கே உள்ள ஸ்மோலென்ஸ்கி நகரில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 132 பேர் பலியானார்கள்.

உயர்ந்த மரக்கிளைகளில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய இந்த விமானத்தில் போலந்து அதிபர் லெக் கேக்சின்ஸ்கி, அவரின் மனைவி மரியாவும் பயணம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தின் அருகே இன்று சனிக்கிழமை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

132 பயணிகளுடன் வார்சாவில் இருந்து மாஸ்கோவை நோக்கி வந்த போது 'டுபோலெவ் டியு-154' என்ற இந்த விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. கடுமையான பணி காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என கருதப்படுகிறது. பனியில் காட்சித் தெளிவு இல்லாத காரணத்தால் ஸ்மோலென்ஸ்கி விமான நிலையத்தில் இறங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஓடுதளம் தெளிவாக தெரியாததால், விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிமீ தொலைவில் உயரமான மரங்கள் மற்றும் பாறைகளில் இடித்து விமானம் நொறுங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 20 ஆண்டுகளாக பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளது.

பலியானதாக கூறப்படும் போலந்து அதிபர் லெக் கேக்சின்ஸ்கிக்கு வயது 60. கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பொறுப்பை ஏற்றார். அவருடன் பலியான மனைவி மரியா பொருளாதாரத் துறை நிபுணர். போலந்து அதிபர் தம்பதி தவிர, ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இறந்தவர்கள் பட்டியலில் அடக்கம். பலியானவர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரஷ்யாவில் விமான விபத்து – போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி"

கருத்துரையிடுக