21 ஏப்., 2010

ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் : தேவைக்கு அதிகமான எச்சரிக்கை

ஐஸ்லாந்திலுள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பலின் அளவுகள் மற்றும் அதன் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், அறிவியல் குறிப்புகள் மற்றும் ஆய்வுகளைக் காட்டிலும் கணினி மூலமான வரைபடங்களை வைத்து தேவைக்கும் அதிகமாக கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டார்கள் என்கிற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.


இந்த எரிமலை வெடிப்பு விமானப் போக்குவரத்தின் மீது ஏற்படுத்திய முன்னுதாரணமற்ற பாதிப்பு காரணமாக ஐரோப்பிய வான் பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவுக்கு பின்னுள்ள அறிவியல் அடிப்படையை பல விமான நிறுவனங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

பிரிட்டனின் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் உண்மைகளின் அடிப்படையில் செயல்படாமல், அச்சத்தின் அடிப்படையில் செயல்பட்டது என்று விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தர, உலக அளவில் அமைந்துள்ள ஒன்பது எரிமலை சாம்பல் தகவல் மையங்களில் இந்த பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமும் ஒன்று.

ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரம் மீண்டும் வெடித்தபோது, பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் பயன்படுத்திய கணினி மாதிரிகள் இந்த எரிமலை சாம்பல் துகள்கள் விரைவாக பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பாவை மூடிவிடும் என்று கணித்தன.

இந்த கணிப்புதான், சுற்றுச்சூழலில் எந்த அளவுக்கு சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கக்கூடும் என்பது குறித்த துல்லியமான தரவுகள் இல்லாத நிலையிலும், வான்பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவிற்கு முக்கிய அடிப்படையாக அமைந்தது.

இந்த முடிவு விஞ்ஞானிகள் கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாடு என்பதனை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கோட்பாட்டின்படி, எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதில் ஒரு வரையறுக்கப்படாத ஆபத்து இருந்தால், அந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பிரேரிப்பவர்கள்தான், அந்த நடவடிக்கை ஒரு பாதுகாப்பான நடவடிக்கை என்பதை நிரூபிக்க வேண்டியர்கள் ஆவார்கள்.

எரிமலை வெடிப்பு போன்ற அபூர்வமாக நிகழும் சம்பவங்களை ஆராயும்போது, இது போன்ற கணினி மாதிரிகளைத்தான் ஓரளவுக்கு நாம் நம்ப வேண்டியிருக்கிறது என்கிறார் இங்கே பிரிட்டனில் எக்சிடர் பல்கலைக்கழகத்தில் ஆபத்து நிர்வாகத்தில் வல்லுநராக இருக்கும் டாக்டர் ஸ்டிபான் ஹாரிசன்.

பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தாங்கள் பலூன்கள் மூலமாகவும், லேசர் கதிர்கள் மூலம் எடுத்த அளவீடுகளைக் கொண்டும் சேகரித்த பிந்தைய தகவல்கள், இந்த சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கும் பகுதி மற்றும் அவைகளின் அளவை உறுதிப்படுத்தியிருப்பதாக, தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு விஞ்ஞானம் குறித்து சில மிக விவரணமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஜெட் விமான இயந்திரங்களில் இந்த நுண் துகள்களில் எந்த அளவு துகள்கள் அடைத்துக் கொள்ளும், எப்போது இந்த சாம்பல் திரள் கலையும், போன்ற இந்த மாதிரிக் கேள்விகளுக்கு இப்போதைக்கு அறிவியல் ரீதியாக விடைகள் தர தேவைப்படும் தரவுகள் இல்லை.
source:bbc.uk

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் : தேவைக்கு அதிகமான எச்சரிக்கை"

கருத்துரையிடுக