25 ஏப்., 2010

டெலிபோனை ஒட்டுக் கேட்காமல் தேசப்பாதுகாப்பு எவ்வாறு சாத்தியமாகும்?

ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையும் கடித்ததாக கூறப்படுவது தமிழகத்தின் சில ஊர்களில் புழக்கத்திலிலுள்ள பழங்கதையாகும்.அதைப்போல் தான் நமது பாதுகாப்பு ஏஜன்சிகளின் விவகாரமும்.

தேசத்தில் எதிரிகள் பலவிதம். வெளிநாட்டு எதிரிகள் ஒரு வகை. உள்நாட்டில் பதுங்கியிருக்கும் எதிரிகள் இன்னொருவகை. வெளிநாட்டு கரன்சியை வாங்கி உள்நாட்டு ரகசியங்களை விற்கும் ஐந்தாம் படையினர் மற்றொரு வகையினர். உள்நாட்டுப் பணத்தை வாங்கி வெளிநாடுகளில் குழப்பம் விளைவிக்கும் தேசாபிமானிகள் வேறொரு வகையினர். ஆக மொத்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு மிகப்பெரிய கோலாகலம் தான் போங்க!.

கோடிகணக்கான ரூபாய்கள் இதில் புரளுகின்றன. தேசத்திற்கு பாதுகாப்பு கிடைக்காவிட்டாலும் கூட பாதுகாப்பு வியாபாரத்தை மொத்தமாகவும், சில்லறையாகவும் நடத்தும் முதலாளிகளுக்கு கொண்டாட்டம் தான். எத்தனை விதமான பாதுகாப்பு ஏஜன்சிகள் நம் நாட்டில் செயல்படுகின்றன? ஆட்சியாளர்களுக்கு கூட தெரியாது. சாதாரண போலீஸும், ராணுவமும் ஒருவகை. ராணுவத்தினரைப் பொறுத்தவரை ஊணும் உறக்கமும் அவ்வப்போது அணிவகுப்பு நடத்தியும் எல்லையில் சில்லறைத்தனமான துப்பாக்கிச் சூடுகளை நடத்தியும் காலத்தை ஓட்டுகிறார்கள்.

உள்நாட்டு பாதுகாப்பிற்கும் இதே மாதிரி வகையினர் பலர் உண்டு. போலீஸை பொறுத்தவரை உள்ளூர் போலீஸ், க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ், சட்ட-ஒழுங்கை நிலை நாட்டும் போலீஸ், ரகசிய போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் என பல பெயர்களில் அவர்கள் செயல்படுகிறார்கள். இதனைத் தவிர இண்டலிஜன்ஸ் பீரோ, ரிசர்ச் அண்ட் பீரோ அனாலிசிஸ் விங் என்ற பெயரில் பல வில்லன்களும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றித் திரிகிறார்கள். இவர்களுடைய ஒட்டுமொத்த நோக்கம் இந்தியாவை எல்லாவித எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். இவர்களில்லையெனில் இந்தியா என்ற மாபெரும் தேசம் என்றோ எதிரிகளின் கஸ்டடியில் சென்றிருக்கும் என்பது இவர்கள் எல்லோருடைய எண்ணமும் கூட.

தேசத்தின் எதிரிகள் உள்நாட்டிலும் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தான் தெரியாது. அதனால் இத்தகைய துறைகளில் ஆட்களை தேர்வுச் செய்யும் பொழுது ஆளைப்பார்த்தும், ஜாதி,மதம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்துதான் தேர்வுச் செய்வார்கள். கழுத்தில் பூணூலும், கையில் ருத்ராட்சமும் வேண்டும். அதிகாலையில் எழுந்து காயத்ரி மந்திரம் கூறி குளத்தில் தலைமுழுகும் பார்ப்பண இனத்தைச் சார்ந்தவனாக இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரெல்லாம் இதற்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள். அவர்களெல்லாம் தீவிரவாதிகளாகவும், நக்ஸலைட்டுகளாகவும் மாறிவிட்டால் என்னச்செய்வது. தேசத்தின் பாதுகாப்பு பிரச்சனையல்லவா! ஆதலால் அங்கு என்ன நடக்கிறது? யார் யார் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்? அரசு கருவூலத்திலிருந்து அளிக்கப்படும் பணமெல்லாம் எவ்வாறு செலவிடப்படுகிறது? என்ற கேள்விகளுக்கே இடமில்லை. பாராளுமன்றமும் இதுத்தொடர்பான கணக்கு வழக்குகளை குறித்து கேள்வி எழுப்புவதில்லை. தேசபாதுகாப்பு விஷயத்தில் கணக்கு கேட்பதா?
சமீபத்தில் ஆந்திராவைச் சார்ந்த பாதுகாப்பு வல்லுநர் ஒருவர் கருத்தரங்கு ஒன்றில் ஆந்திராவில் நக்ஸல்கள் ஒடுங்கிவிட்டார்கள். அவர்களெல்லாம் தண்டேவாடாவுக்கு சென்றுவிட்டார்கள் என்றார். இதனால் ஆந்திர போலீஸார் அங்கலாய்க்கிறார்களாம். முன்பு நக்ஸல்களை ஒடுக்க கட்டுக்கட்டாக பணம் அளிக்கப்படும். எதற்காக செலவழித்தீர்கள்? எவ்வாறு செலவழித்தீர்கள்? என்ற கேள்வியெல்லாம் கிடையாது. இனி அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டால். அந்த அங்கலாய்ப்புதான்.

அதிர்ஷ்டத்திற்கு ஆங்காங்கே நக்ஸல்களின் தாக்குதல்களும், குண்டுவெடிப்புகளும் நிகழ்கிறது.கூடவே பத்திரிகையாளர்களின் ஆதரவும். இதை வைத்து கொஞ்ச காலம் ஓட்டலாம் என்ற எண்ணம் பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு. அதுவும் இல்லாவிட்டால் என்ன நம்ம பிரக்யாசிங்கும், கர்னல் புரோகித்தும் இருக்கின்றார்களே இவர்களை போன்றவர்களே வைத்து சம்பவத்தை நிகழ்த்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு காரியத்தை சாதிக்கலாமே? இதெல்லாம் பரஸ்பர ஒத்துழைப்பல்லவா?

இச்சூழலில்தான் செய்தி வருகிறது, பாதுகாப்பு காரணங்களுக்காக டெலிபோனை ஒட்டுக் கேட்பதற்காக சிறப்பு பிரிவு ஒன்று உள்ளது என்று. நேசனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேசன் என்பது அதன் பெயராம். அவர்கள் ஒட்டுகேட்டு ஒட்டுக்கேட்டு கடைசியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங்கின் டெலிபோன் உரையாடலையும் ஒட்டுக் கேட்டார்கள் என்பதுதான் ஹாட் நியூஸ்.

இப்பொழுது மேலேச்சொன்ன பழங்கதையின் அர்த்தம் புரிகிறதல்லவா? மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் பணியாற்றியுள்ள திக் விஜய் சிங்குக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பாதுகாப்புத் தொடர்பான அணுகுமுறையில் கருத்துவேறுபாடு உண்டு. நக்ஸல்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனைகள் தீரலாம் ஆனால் பழங்குடியின பகுதிகளில் எவரும் இருக்கமாட்டார்கள் என்று சமீபத்தில் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் டெல்லி பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களின் வீடுகள் அமைந்திருக்கும் உ.பி. மாநிலம் ஆஜம்கருக்கு சென்று வந்தார். அதனால்தான் தோழர் பிரகாஷ் காரட்டின் டெலிபோனுடன் திக் விஜய்சிங்கின் டெலிபோன் உரையாடலும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இனி அடுத்து யார்? சோனியா காந்தியாக இருக்கலாம். ஏனெனில் இப்பொழுதும் இந்நாட்டில் சிலர் சோனியாவை 'ஃபாரின் மேடம்' என்றே அழைக்கிறார்கள். சோனியா மேடம் ஜாக்கிரதை!
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "டெலிபோனை ஒட்டுக் கேட்காமல் தேசப்பாதுகாப்பு எவ்வாறு சாத்தியமாகும்?"

கருத்துரையிடுக