புனேயில் கடந்த பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பின்; சூத்திரதாரி என்று கடந்த மே 24 அன்று மங்களுர் விமான நிலையத்தில் கைதுச் செய்யப்பட்ட அப்துஸ் ஸமது பட்கலின் குடும்பத்தினர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது பதிவான வீடியோ காட்சிகளில் இடம் பெற்ற ஒருவரது முகம் அப்துஸ் ஸமது பட்கலின் முகசாயல் போல் உள்ளது என்று கூறி துபாயில் இருந்து மங்களுர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அப்துஸ் ஸமது கைதுச் செய்யப்பட்டார்.
அப்துஸ் ஸமதுவின் மாமா முஹம்மது இப்றாஹிம் சித்திபாபாவின் மகள் திருமணத்தில் விருந்தினர்களுக்கு அப்துஸ் ஸமது உணவு பரிமாறும் காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சியில் திருமணம் நடைபெற்ற தேதி குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை.இருப்பினும் திருமணம் நடைபெற்ற தினங்கள் இந்த ஆண்டு பிப்ரவரி 5 மற்றும் 6 என்பது வீடியோவில் காட்டப்படும் அழைப்பிதழில் இருந்து தெரிய இயலுகின்றது. வலிமா பிப்ரவரி 15 அன்று நடைபெற்றது என்றும் அதுவரை அப்துஸ் ஸமது மங்களுரிலேயே தங்கி இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அப்துஸ் ஸமது பட்கல் கைதுச் செய்யப்பட்டது ஒரு பெரும் சாதனை போல் வர்ணிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மிக சாதுரியமாக செயல்பட்டு குண்டுவெடிப்பு நடைபெற்ற 100 நாட்களுக்குள் புனே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியை கைதுச் செய்ததற்காக மராட்டிய பயங்கரவாத எதிர்ப்பு படையினரை பாராட்டினார்.
மிகப் பெரும் குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு துபாய்க்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு அப்துஸ் ஸமது எப்படி திரும்பியிருக்க இயலும் என்ற கேள்விக்கு ஏ.டி.எஸ். பதில் சொல்லியாக வேண்டும்.
தனது யாஹு மின்னஞ்சல் மூலம் அப்துஸ்ஸமது அனுப்பிய இரண்டு அஞ்சல்கள் தான் அவர் குண்டுவெடிப்பு நடைபெற்ற தினத்தில் புனேயில் இருந்ததற்கான ஆதாரம் என்று கூறப்படுகின்றது. ஆனால் அதற்கான தடயம் எதனையும் ஏ.டி.எஸ்.சினால் திரட்ட இயலவில்லை. மேலும் அப்துஸ் ஸமது பயன்படுத்திய செல்பேசிகளும் அப்துஸ் ஸமது குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான தடயத்தை அளிக்கவில்லை என்றும் ஹெட்லைன்ஸ் தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.
மும்பையில் அப்துஸ் ஸமது பட்கலின் தாயார் பீபீ ரேஹானா. அவரது மாமா முஹம்மது இப்றாஹீம் மற்றும் மாமி சி.ஹலிமா ஆகியோர் தங்கள் வீட்டு பிள்ளை மீது அநியாயமாக காவல்துறை புனே குண்டு வழக்கையும், ஆயுத வழக்கையும் புனைந்திருப்பதாக குற்றஞ்சாட்டினர்.
பெங்களுரில் அப்துஸ் ஸமது கணிணி கற்று வந்ததாகவும் அவருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என்று அக்கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
அப்பாவி முஸ்லிம்களை கைதுச் செய்து சிறையில் அடைத்து விட்டு உண்மை குற்றவாளிகளை தப்ப விடும் இந்த கொடுஞ்செயல்கள் என்று முடியுமோ?

0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு:கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமது பட்கல் அப்பாவி? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்"
கருத்துரையிடுக