28 ஜூலை, 2010

பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15 க்குப் பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு

லக்னோ,ஜுலை28:பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அனைத்து விசாரணைகளும் வழக்கறிஞர்களின் விவாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு செப்டம்பர் 15க்கு பிறகு எந்த தேதியிலும் வழங்கப்படலாம் என்ற அறிவிப்புடன் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவில் 1960 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதிற்குள் சில பயங்கரவாதிகள் புகுந்து ராமர் லட்சுமணர் சீதை மற்றும் அனுமாரின் சிலைகளை வைத்து விட்டனர்.அப்போது அந்த மாவட்ட ஆட்சியர் பாபரி மஸ்ஜிதை பூட்டுவதற்கு உத்தரவிட்டார்.இரண்டு பூஜாரிகள் மட்டும் பள்ளிவாசலுக்குள் சென்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டடிருக்கும் சிலைகளுக்கு பூஜை நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.இது தொடர்பாக முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு கீழ்நிலை நீதிமன்றங்களிலிருந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருந்தது.

இச்சூழலில் 1986 பிப்ரவரி 2ம் நாள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் உமேசு சந்திர பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் பாபரி மஸ்ஜித் பூட்டை உடைத்து ராம பக்தர்கள் உள்ளே செல்வதற்கு மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் முனைந்தன. இறுதியில் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து லக்னோ பிரிவில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வழக்கறிஞர்களை நியமித்து நடத்தி வந்தது.

அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால் மற்றும் தரம்வீர் சர்மா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தார்கள்.

சுன்னத்தி மத்திய வக்ப் வாரியம் எதிர் விசாரத் சர்மா என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜுலை 26 அன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நீடித்தது. நீதிபதிகள் விசாரணைக்கு சமர்பிக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டனர். இரு தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இறுதியில் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் செப்டம்பர் 15க்கு பிறகு எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த வழக்கில் ஹிந்துக்கள் சார்பாக 54 சாட்சிகளும் முஸ்லிம்கள் சார்பாக 33 சாட்சிகளும் நீதிமன்றம் முன்பு முன்னிலையாகி சாட்சியம் கூறினர். முஸ்லிம்கள் தரப்பு சாட்சிகளில் பெருமாபாலனவர்கள் இந்துக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி செய்தியாளர்களிடம் பேசிய போது: "நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கின்றது. எங்கள் தரப்பு வாதம் மிக வலுவாக உள்ளது. பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15 க்குப் பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு"

கருத்துரையிடுக