12 ஜூலை, 2010

கஷ்மீர் ஆலோசனைக் கூட்டம்:மெஹபூபா முப்தி புறக்கணிப்பு

ஸ்ரீநகர்:கஷ்மீரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து ஆலோசிக்க திங்கள்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மெஹபூபா முப்திக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்தார். ஆனால் ஒமரின் அழைப்பை மெஹபூபா நிராகரித்தார்.

இதையடுத்து மெஹபூபா முப்தியை சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,கஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் பிரதமரின் வேண்டுகோளையும் மெஹபூபா முப்தி நிராகரித்தார். மெஹபூபா முப்தி ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஒமர் அப்துல்லா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த மெஹபூபா, கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று நான் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கஷ்மீரில் உருவாகியுள்ள பிரச்னையைத் தீர்க்க பிரதமர் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்றார்.

காஷ்மீர் பிரச்னையை கையாளுவதில் ஒமர் அப்துல்லா தோற்றுப்போய்விட்டார். இதை மூடிமறைக்கவே அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று மெஹபூபா முப்தி கூறினார்.

கஷ்மீரில் வெடித்துள்ள போராட்டத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கவே ஒமர் அப்துல்லா முயல்கிறார். ஆனால் மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழலை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

கஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமரிடம் ஆலோசித்தீர்களா என்று கேட்டதற்கு, ஆலோசித்தேன். கஷ்மீரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர அவரை தலையிடுமாறும் வலியுறுத்தினேன் என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் ஆலோசனைக் கூட்டம்:மெஹபூபா முப்தி புறக்கணிப்பு"

கருத்துரையிடுக