18 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித்:சமரசம் அல்ல தீர்ப்புதான் தேவை

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நில உரிமைத் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவர சில நாட்களே மீதமிருக்கும் சூழலில் கட்சிதாரர்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் முயற்சி நடைபெறுகிறது என்ற செய்தியை கேட்டவுடனேயே அம்முயற்சியை வரவேற்று சங்க்பரிவார் தலைவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இது 'எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை' என்பதை உரக்கக் கூறுவதற்கு சமமாகும். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சேதங்களை சந்தித்து துயரத்தை அனுபவித்துவரும் ஒரு சமூகம்தான் முஸ்லிம் சமூகம். இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என அவர்கள் கூறும்வேளையில், 'நாங்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம்' என திமிர்த்தனமாக கூறுவதோடு மட்டுமல்லாமல், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை கோயில் கட்டுவதற்கு விட்டுக்கொடுத்து தேசத்துடனான பற்றை நிரூபிக்கக்கூடிய வாய்ப்பை பயன்படுத்த அழைப்புவிடுத்துள்ளனர்.

அதாவது, ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகம் தம்மோடு வாழும் சிறுபான்மை சமூகத்திடம் காட்டவேண்டிய குறைந்தபட்ச மரியாதைகளையும் காற்றில் பறத்திவிட்டு, அவர்களுடைய வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட கலாச்சார அடையாளங்களை அழித்ததற்காக பாவமன்னிப்புக்கூட கோராமல் ஏற்கனவே நொந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக நடந்துக்கொள்கிறது சங்க்பரிவார்.

இதன்மூலம், அவர்கள் இந்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர். வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள பிரதமர் முயற்சி மேற்கொள்ளவேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிக்கை ஓர் அரசியல் தந்திரமாகும்.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக மாறினால், ஏற்படப்போகும் மதக்கலவர அச்சுறுத்தலை காண்பித்து ஆட்சியாளர்களுக்கும், நீதித்துறைக்கும் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர்.

வருடங்கள் பல ஆனபிறகும், நீதிக்கிடைப்பதற்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கான கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

எது தகர்க்கப்பட்டதோ அது புனர் நிர்மாணிக்கப்படும் என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சட்டரீதியான போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள் முஸ்லிம்கள்.

காலந்தாழ்ந்த நீதி நீதியல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் முஸ்லிம்களல்ல.

முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் வழக்குகளை அதிவிரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக விசாரித்து தீர்ப்புக் கூறுவதற்கும், அவர்கள் பாதிப்பிற்குள்ளான வழக்குகளை முடிந்தவரை இழுத்துக் கொண்டுசெல்வதற்கும் பின்னனியிலுள்ள மர்மம் என்ன?

முஸ்லிம் சமூகத்தின் தன்னம்பிக்கையின் அஸ்திவாரம் தான் அயோத்தியில் கடப்பாறைகளால் தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித். அஸ்திவாரத்தை இழந்த ஒரு சமூகத்தின் முன்னால் போராட்டத்தைத் தவிர வேறு வழிகள் இல்லை.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:சமரசம் அல்ல தீர்ப்புதான் தேவை"

கருத்துரையிடுக