22 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் வழக்கை நடத்த சிறப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும் - செய்யத் ஷஹாபுத்தீன்

புதுடெல்லி,அக்.22:அயோத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் எல்லா முஸ்லிம் அமைப்பினரும் கட்சிதாரர்களாக இணையவேண்டும் என ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராத்தின் தலைவர் செய்யத் ஷஹாபுத்தீன் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கைகளுக்கும், பாப்ரி மஸ்ஜிதின் புனர் நிர்மாணத்திற்காகவும் சிறப்பு கமிட்டியை உருவாக்கவேண்டும் என பாப்ரி மஸ்ஜித் மூவ்மெண்ட் கோ ஆர்டினேசன் கமிட்டியின் கண்வீனருமான ஷஹாபுத்தீன் கோரினார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் லக்னோவில் கூட்டிய முஸ்லிம் அமைப்பினர்களின் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்தான் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

முன்னர் முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் ஒய்.ஹெச்.முச்சாலா வெளியிட்ட சிறிய அறிக்கை போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் ஷஹாபுத்தீன் புதிய அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பை அதிர்ச்சியோடுதான் தேசம் கிரகித்தது. வழக்கின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு ஹாஷிம் அன்சாரி போன்ற மனுதாரர்களை கட்சிதாரராக சேர்த்து உ.பி.சுன்னி வக்ஃப் போர்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்ய தீர்மானித்துள்ளது.

சட்டரீதியான போராட்டத்தின் மூலம் அனுகூலமான தீர்ப்பிற்காக முஸ்லிம் சமூகம் சிறப்புக் கவனத்தை செலுத்தவேண்டும். சிறிய மற்றும் பெரிய அமைப்புகளும், தனிநபர்களும் வழக்கில் கட்சிதாரராக இணைய வேண்டும். முஸ்லிம்களோடு அனுதாபம் காட்டுபவர்களையும் கட்சிதாரராக இணைக்க வேண்டும்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான மஸ்ஜிதுகள் மற்றும் தர்காக்கள் மீது உரிமை கோரும் சூழலில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஷஹாபுத்தீன் சுட்டிக்காட்டினார்.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கெதிராக சட்டரீதியான போராட்டம் நடத்த பத்துகோடி நிதியை உருவாக்க முஸ்லிம் தனியார் சட்டவாரியம் உதவவேண்டுமென அறிக்கையில் கூறிய ஷஹாபுத்தீன் அந்த நிதிக்காக பத்துலட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பேன் என தெரிவித்தார்.

மத அமைப்புகளுடன் வழக்கறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், மதசார்பற்ற-முற்போக்கு பிரிவினர்கள் ஆகியோரையும் இவ்வழக்கில் கட்சிதாரராக ஆக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளைக் குறித்து லக்னோ கூட்டத்தில் அபிப்ராயம் நிலவியதாக ஷஹாபுத்தீன் தெரிவித்தார்.

ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர், ஜம்யத்துல் உலமாயே ஹிந்த் தலைவர், அமீரே ஜமாஅத் ஷரீஅத் பீகார் மற்றும் ஒரிசா, அமீரே இமாரத்தே ஷரீஅத் கர்நாடகா அமீர், தாருல் உலூம் நத்வத்துல் உலமா தலைவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள், ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் ஆகியோர் லக்னோ கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் வழக்கை நடத்த சிறப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும் - செய்யத் ஷஹாபுத்தீன்"

கருத்துரையிடுக