16 ஜன., 2011

வெளிநாட்டு வங்கிக் கணக்கு௦: அரசியல்வாதிகளின் பெயர்களை மறைப்பது ஏன்? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி,ஜன.16:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிடாதது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி, நீதிபதி எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது.

ராம் ஜெத்மலானி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவாண் வாதாடும்போது, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயர்களை மத்திய அரசு வெளியிடாமல் அவர்களைப் பாதுகாத்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

மத்திய அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி அரசுத் தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இது வரி விவகாரம் மட்டும் தொடர்புடையது அல்ல, பல்வேறு முக்கிய பிரச்னைகள் இதில் அடங்கியிருக்கிறது. வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் பெயர்ப் பட்டியல் மத்திய அரசிடம் இருக்குமானால், அதை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பிடம் விளக்கம் கேட்க காலஅவகாசம் தேவை என்று சொலிசிடர் ஜெனரல் கோரினார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

கறுப்புப் பணம்:வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் லீக்டென்ஸ்டைன் நாட்டில் செயல்படும் சுவிஸ், ஜெர்மனி நிறுவன வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

அந்த நாட்டு விதிகளின்படி, வெளிநாட்டினரின் வங்கிக் கணக்குகள் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் நாடுகளால்கூட அந்த வங்கிக் கணக்கு விவரங்களைப் பெறமுடியவில்லை.

லிடென்ஸ்டின் நாட்டில் சுவிஸ், ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த சுமார் 15 வங்கிகள் உள்ளன. இதில், எல்.டி.ஜி. என்ற வங்கியில்தான் வெளிநாட்டினர் பெருமளவில் பணத்தை குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஜெர்மனி அரசு, தன்னுடைய உளவுத் துறை மூலம் எல்.டி.ஜி. முன்னாள் ஊழியர் மூலம் அந்த வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளது. சுமார் 1,400 வெளிநாட்டினர் அந்த வங்கியில் கறுப்புப் பணத்தை குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் 87 பேர் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, நார்வே, சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஜெர்மனியிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றுள்ளன. இதே விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருப்பதாக ஜெர்மனி அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ஜெர்மனி அரசிடம் இருந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசு பெற்று விட்டதாகவும், ஆனால், அந்த தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காப்பதாகவும் எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெளிநாட்டு வங்கிக் கணக்கு௦: அரசியல்வாதிகளின் பெயர்களை மறைப்பது ஏன்? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி"

கருத்துரையிடுக