20 பிப்., 2011

லிபியா,யெமனில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தீவிரம்

திரிபோலி/ஸன்ஆ,பிப்.20:லிபியாவிலும், யெமனிலும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
லிபியா
லிபியாவில் ஏகாதிபத்தியவாதியான முஅம்மர் கத்தாஃபியின் ஆட்சிக்கெதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் 3-வது நாளை கடந்த நிலையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்தும் கத்தாஃபிக்கு எதிரான புரட்சிக்கனல் உருவானது லிபியாவின் பெரிய நகரமான பெங்காசியிலிருந்தாகும். இங்கு 35 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சாரம் தடைச் செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உண்மையான செய்திகள் வெளிவரவில்லை.

அல்ஜஸீரா, ஃபேஸ்புக் சமூக இணையதளம் ஆகியவற்றுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது.

கத்தாஃபி சுற்றுப் பயணம் செய்யும் பொழுது பயன்படுத்தும் கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் அல்ஜலா மருத்துவமனைக்கு வந்துள்ளதாக ஹியூமன்ரைட்ஸ் வாட்ச் தெரிவிக்கிறது.

அல்பதியா, அஜ்தாபியா, ஸாவியா, தர்னா ஆகிய நகரங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் இணையதளம் தெரிவிக்கிறது.

போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகும் மக்கள் கலைந்து செல்லாமல் கட்டிடத்தின் முன்னால் திரண்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

அரசு கட்டிடங்கள் மற்றும் கத்தாஃபியின் சிலைகள் மீது போராட்டத்தில் ஈடுபட்டோர் தாக்குதல் நடத்தினர். அதேவேளையில், தலைநகரான திரிபோலியில் போராட்டம் பெரியதொரு சலனத்தை ஏற்படுத்தவில்லை. இங்கு கத்தாஃபியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, உயர் பதவியிலிருப்போர் பலரையும் மாற்றிவிட்டு அரசில் பல சீர்திருத்தங்கள் நடத்த முயற்சி நடந்து வருவதாகவும் குரினா பத்திரிகை தெரிவிக்கிறது. போராட்டம் வலுவாக அடக்கி ஒடுக்கப்படும் என அரசு ஆதரவு பத்திரிகையான அல் ஸஹ்ஃப் அல் அக்தர் செய்தி வெளியிட்டிருந்தது.

1969-ஆம் ஆண்டு முதல் பதவியிலிருந்து வரும் கத்தாஃபி அரபு உலகில் அதிக காலம் பதவி வகிக்கும் ஏகாதிபத்திய ஆட்சியாளராவார்.
யெமன்
யெமன் நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சியாளர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தேச முழுவதும் பரவி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம், போலீசும் நடத்திய அநியாய துப்பாக்கிச் சூட்டிலும், கிரேனேட் தாக்குதலிலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

தெற்கு துறைமுக நகரமான ஏடனில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைப்பதற்காக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்குபேர் கொல்லப்பட்டனர். போலீஸ் மக்களை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டு, கண்ணீர் புகையை உபயோகித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

தைஸ் நகரத்தில் ஒரு காரிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட கிரேனேடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் காயமடைந்தனர்.

வறுமையாலும், ஊழலாலும் அவதியுறும் யெமன் நாட்டு மக்கள் அந்நாட்டு அதிபருக்கு எதிராக நடத்தும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

துனீசியாவிலும், எகிப்திலும் மக்கள் எழுச்சியின் காரணமாக ஆட்சியாளர்கள் பதவியை ராஜினாமாச் செய்தது யெமன் மக்களுக்கு உத்வேகத்தை அளித்திருப்பதாக செய்தி ஏஜன்சிகள் தெரிவிக்கின்ற்ன.

இதற்கிடையே தலைநகர் ஸன்ஆவில் அதிபரின் ஆதரவாளர்களும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் மோதலில் ஈடுபட்டனர். போலீசாரும், அதிபரின் ஆதரவாளர்களும் நகரத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா,யெமனில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தீவிரம்"

கருத்துரையிடுக