13 பிப்., 2011

நினைவலைகளி​ல் ஷாஹித் ஆஸ்மி

ஷாஹித் ஆஸ்மி - மனித நேயமிக்க துணிச்சலான வழக்கறிஞர். அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் அவர்களுக்காக வாதாடியவர்.

தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை துணிவுடன் எடுத்து நடத்தி விடுதலையைப் பெற்றுத் தந்தவர். நீதிக்காக போராடிய அந்த இளைஞரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அக்கிரமக்காரர்களின் கைக்கூலிகள் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தனர்.

நீதிக்கான போராட்டத்தில் அந்த லட்சிய வீரர் தனது இன்னுயிரை இழந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இவ்வேளையில் அவரைக் குறித்த சில நினைவலைகளை அவருடன் தொடர்புடையவர்களிடமிருந்து பகிர்ந்து கொள்வோம்.

ஷாஹித் ஆஸ்மியின் தாயார் ரிஹானா ஆஸ்மி - இவருடைய கணவர்(ஷாஹிதின் தந்தை) இறந்து பல வருடங்களாகிவிட்டன. ரிஹானா மார்க்கப்பற்றுள்ள பெண்மணி. தனது பேச்சினூடே திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் மேற்கோள்காட்டுவார்.

தனது மகனைக் குறித்து ரிஹானா கூறுகிறார். "நான் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். அவனைக் கொன்றவர்கள் கட்டாயம். தூக்கிலேற்றப்பட வேண்டும். இதன் மூலம் எனது மகனுக்கு நீதிக் கிடைக்கவேண்டும்." எனக்கூறிய அவரிடம், உங்கள் மகனை கொலைச் செய்தவர்கள் யார்? எனக் கேட்டபோது, அவர் கூறினார், "ஹேமந்த் கர்காரேயை யார் கொன்றார்களோ? அவர்கள்தான்!" என பதிலளித்தார்.

'உங்கள் மகன் ஷாஹித் ஆஸ்மி கொலைச் செய்யப்பட்டுள்ள சூழலில், அதே வழக்கறிஞர் தொழிலுக்கு ஏன் உங்களது இளைய மகனையும் பணிபுரிய அனுமதித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஹானா, "நான் எனது இறைவனை சந்திப்பதைக் குறித்து பயப்படுகிறேன். உனது மூத்தமகன் கொலைச் செய்யப்பட்டதால் பயந்துபோய் உனது இளைய மகனை பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்காக உழைக்கும் பணியை ஏற்கச் செய்வதிலிருந்து தடுத்தாயா? எனக்கேட்டால் நான் என்னச் செய்வேன்?" என வினா எழுப்பிய ரிஹானா, "அல்லாஹ் எனது இளைய மகனை காப்பாற்றுவான்" என உறுதியுடன் தெரிவித்தார்.


மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் கிராந்தி நகர் சேரிப் பகுதியில் வசிப்பவர் தன்னா. இவர் ஒரு விதவையாவார். ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து நினைவுக்கூறும் பொழுது அவர் முகத்தில் தெரிந்த வருத்தத்தை நம்மால் உணரமுடிகிறது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அவர் கூறுகிறார்: "எனது மகன் ஹேமந்த். அவனுக்கும் இன்னொரு நபருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த நபர் தற்செயலாக இறந்துவிட்டார். போலீசார் எனது மகன் மீது 302-பிரிவின் படி கொலைக் குற்றத்தை சுமத்தினர். நான் ஒரு விதவை. நான் எனது மகனை வழக்கிலிருந்து விடுவிக்க பல வழக்கறிஞர்களையும் அணுகினேன். வழக்கிற்காக என்னிடமிருந்த அனைத்தையும் விற்றதுதான் மிச்சம். எல்லா வழக்கறிஞர்களுமே 'உங்கள் மகனை எங்களால் காப்பாற்ற இயலாது' என கைவிரித்து விட்டனர். இந்நிலையில் ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து கேள்விப்பட்டு அவரை வெறுங்கையுடன் சென்று சந்தித்தேன்.

ஷாஹித் என்னிடம் இந்த வழக்கில் காசு வாங்காமலேயே வாதாடுகிறேன் எனத் தெரிவித்ததோடு 2006 ஆம் ஆண்டு எனது மகனுக்கு இவ்வழக்கிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தந்தார். எனது மகன் ஹேமந்தைப் போல் ஷாஹிதும் எனக்கு மகன்தான்.

70 அடி பரப்பளவைக் கொண்ட எங்கள் வீட்டில் ஷாஹித் வந்தால் தரையில் உட்காருவார். மாதந்தோறும் எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாகக் கூட எங்களுக்கு நிதியுதவி அளித்தார். அவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஏன் எனது மகனைப் போல் நான் கருதிய நேர்மையான மனிதரை கொலைச் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தோம். ஆனால், அவருடைய சகோதரர் காலித் ஆஸ்மி தனது சகோதரரைப்போல் எங்களுக்கு உதவிச் செய்வதாக வாக்களித்தார். இப்பொழுது காலிதும் எங்களது மகன்தான். அவரை இறைவன்
காப்பாற்றுவான்." என தெரிவித்தார்.

ஷாஹித் ஆஸ்மி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்ட பொழுது இரண்டு கேள்விகள் மிஞ்சின. ஒன்று. யார் ஷாஹித் ஆஸ்மியின் கொலைக்கு பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்?

இரண்டாவது ஷாஹித் ஆஸ்மியின் பணியை யார் எடுத்து நடத்துவார்?

முதல் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கு விடை அவருடைய இளைய சகோதரர் வழக்கறிஞர் காலித் ஆஸ்மியைத் தவிர வேறு எவரும் விடை தரவில்லை.

ஷாஹித் ஆஸ்மி இறந்து ஒருவாரத்திற்குள் அவரது சகோதரர் காலித் ஆஸ்மி, "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்று செயல்படுவேன்" என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி காலித் ஆஸ்மி தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில்; "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். அவரது பணிகளை சவாலாக ஏற்றுக்கொண்டு உரிய பங்களிப்பை செலுத்துவேன். நான் எனது உயிரைக் குறித்து அஞ்சவில்லை. குறிக்கோள்தான் முக்கியமானது. நான் இதற்காக விலைக் கொடுக்க தயாராகிவிட்டேன். இதனைத் தவிர எனது வாழ்க்கையில்
வேறொன்றுமில்லை" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கலான வழக்குகளில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெதிராக வாதாடிக் கொண்டிருக்கிறார் அவர்.

தகவல்கள்:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "நினைவலைகளி​ல் ஷாஹித் ஆஸ்மி"

பெயரில்லா சொன்னது…

ஷாஹித் ஆஸ்மியின் தாயாரின் மன உறுதியை நினைக்கையில், நபித்தோழியான வீரத்தாய் கன்ஸா(ரலி...) அவர்களின் துணிச்சல்தான் நினைவுக்கு வருகிறது.இத்தகைய தாய்மார்கள்தான் அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை நிற்பார்கள்.அல்லாஹ் அவருக்கு உதவிபுரிவானாக!

Hashmath Hamza சொன்னது…

ஷாஹித் அஸ்மி பற்றி மூதலில் இங்குதான் அறிந்துகொண்டேன், பிறகு நிறைய தகவல்களை தேடினேன். உன்மையில் இவ்வாரான சிறந்த மனிதர்களின் வாழ்க்கை குருகியதாக இருந்தாலும் அவர்கள் மக்கள் மனதில் அழ்ந்த இடம் பிடித்தவர்கள் ஆகிவிடுகின்றனர். அநீதிக்கு எதிரான போராட்டம் என்றும் இவர்போன்ற தியாகிகளால் தான் உயிர் வாழ்கின்றது. அல்லாஹ் அவருக்கு ஜன்னாவை வழங்குவானாக. அதேபோன்று அவருடைய சகோதரருக்கும் அல்லாஹ்வி உதவு என்ன்றென்றும் கிடைக்கட்டும்.

கருத்துரையிடுக