தெஹ்ரான்:தெஹ்ரான் பல்கலைக்கழக பேராசிரியரும் அணுசக்தி விஞ்ஞானியுமான டாக்டர்.மஸ்ஊத் அலி முஹம்மதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
வடக்கு தெஹ்ரானிலிலுள்ள கெய்த்தாரியா மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. பேராசிரியரின் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வெடித்ததாக ஈரான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கரங்கள் உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஈரானின் அணுசக்தித்திட்டத்தை தகர்க்கமுடியாது எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அணுசக்தித்துறை பிரிவில் பேராசிரியரான டாக்டர்.அலி முஹம்மதி இஸ்லாமிய புரட்சியை ஆதரிப்பவர். இச்சம்பவத்திற்கு காரணமான எவரும் இதுவரை கைதுச் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூனில் சவூதி அரேபியாவின் மதீனாவிலிருந்து காணாமல் போன ஸரம் அமீரி என்ற ஈரானைச் சார்ந்த அணுசக்தி விஞ்ஞானியை பின்னர் சவூதி அதிகாரிகள் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததற்கான தகவல் கிடைத்ததாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
ஈரானின் விஞ்ஞானிகளை கடத்துதல் அல்லது கொலைச்செய்தல் என்பது அமெரிக்காவின் ரகசியத்திட்டம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது கடந்த செவ்வாக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு. ஸரம் அமீரி உட்பட 11 ஈரான் நாட்டைச்சார்ந்தவர்கள் அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி குண்டுவெடிப்பில் படுகொலை"
கருத்துரையிடுக