26 ஏப்., 2010

கடந்த ஓராண்டில் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்தவர்கள் 5 லட்சம் பேர்

கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர்.

இந்தியாவில் அனைத்து நோய்களுக்கும் சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் அளிக்கப்படுவதுதான் பல்வேறு நாட்டவரையும் இந்தியாவைத் தேடி வரவைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் அனைத்து நோய்களுக்கும் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் பெரும்பாலான வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தோர் இந்த நாடுகளைவிட இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், நோயாளிகளிடம் இந்திய மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அன்போடும், தன்மையுடனும் நடந்து கொள்ளுவதுதான் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு தில்லி அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அமெரிக்க பெண் கேத்லீன் என்பவர் கூறுகையில், எனக்கு கர்ப்பப்பையில் பிரச்னை இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் அதிகமான தொகை கேட்டனர். அவர்கள் கேட்ட தொகை எனது தகுதிக்கு அதிகமானது.

இதையடுத்து விசாரித்தபோதுதான் தில்லி அப்பல்லோவில் குறைவான செலவில் தரமான சிசிக்சை கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். உடனே நான் தில்லிக்கு புறப்பட்டு வந்து சிகிச்சைப் பெற்றேன்.

தில்லி அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை மட்டுமல்லாமல் அங்கு ஊழியர்கள் என்னை கவனித்ததும் சிறந்தவகையில் இருந்தது என்று அவர் கூறினார்.

சமீபத்தில் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மரியா ரோஸ்மேரி என்பவர் கூறுகையில், இந்திய மருத்துவர்கள் மிகவும் திறைமைவாய்ந்தவர்களாகவுள்ளனர். இதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அதைப்போல மருத்துவர்கள் மட்டுமல்லாது மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் என்னிடம் நடந்து கொண்டவிதம் என்னை பெரிதும் கவர்ந்தது. அவர்களது அன்பான கவனிப்பால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். எனது சொந்த நாட்டுக்குத் திரும்பியதும் எனது நண்பர்கள் உள்பட அனைவரிடமும் சிகிச்சை பெற விரும்பினால் இந்தியாவுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். சிகிச்சைக்காக இந்தியாவைத் தவிர வேற எந்த நாட்டுக்கும் செல்லாதீர்கள் என்று கூறிவருகிறேன் என்றார் மரியா ரோஸ்மேரி.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நோக்கில் மருத்துவ சுற்றுலா திட்டத்தை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் எளிதாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் இந்தியா மருத்துவ சுற்றுலா மையமாக பிரபலமடைந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு கணிசமான வருவாயும் கிடைக்கிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ சுற்றுலா அமைப்பின் செயல் இயக்குநர் பிரதீப் துக்ரல் தெரிவித்தார்.
dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கடந்த ஓராண்டில் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்தவர்கள் 5 லட்சம் பேர்"

கருத்துரையிடுக