புதுடெல்லி:தென்னாப்பிரிக்காவில் கடந்த முறை நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் 27 கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் முடிவை முன்னரே தீர்மானித்து (மேட்ச் பிக்ஸிங்) ஆடியுள்ளனர் என்ற தகவலை வருமான வரித்துறை சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களில் சச்சின்,ட்ராவிட்,கங்கூலி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஐ.பி.எல்லின் பொருளாதார மோசடிகளை விசாரிக்கும் வருமான வரித்துறை இதுவரை நடத்திய விசாரணையின் அறிக்கையை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
ஐ.பி.எல் சேர்மன் லலித் மோடிக்கும் இதில் பங்குள்ளது என அவ்வறிக்கை கூறுகிறது. மோடியின் பொருளாதார முறைகேடுகள் குறித்தும் ஆதாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மோடியை விசாரித்தது, அவருடைய பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பான விளக்கங்களும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.பி.எல்லுடன் தொடர்புடைய ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரான பா.ஜ.கவின் வசுந்தராஜே சிந்தியாவின் தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் கோரிக்கை விடுத்துள்ளார்.
வசுந்தராஜேயின் உதவியுடன் சட்டவிரோதமாக நிலம் வாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பெங்கால் கிரிக்கெட் அசோசியேசனும், கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியின் உரிமையாளரான ரெடி சில்லீசும் இடையிலான எம்.ஒ.யு உள்ளிட்ட முக்கிய ஃபைல்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டு சரியில்லை என்று பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினரின் சோதனையின் பொழுது ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கொச்சி அணியை ஏலத்தில் கைப்பற்ற சசி தரூருக்கு உதவ ஐ.பி.எல் சீஃப் எக்ஸிக்யூடிவ் சுந்தர் ராமனின் ரகசிய இ-மெயில் தரூருக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் திருடிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை ஐ.பி.எல் அதிகாரிகள் மறுத்தனர்.
இதற்கிடையே பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல்லின் நிர்வாகிகள் ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களாகுவதை குறித்து கேள்வி எழுப்பி பி.சி.சி.ஐ யின் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.
பி.சி.சி.ஐ யின் செயலாளரான என்.ஸ்ரீநிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர்களில் ஒருவர் என்று ஏ.சி.முத்தையா அளித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏ.சி.முத்தையாவின் இவ்வழக்கு ஐ.பி.எல்லின் சேர்மன் பதவியை லலித் மோடியிடமிருந்து பறிக்க எடுத்துவரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டைப் போடுவதற்கான நடவடிக்கை எனக் கருதப்படுகிறது.
லலித் மோடியின் நெருங்கிய உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் பல்வேறு அணிகளில் பங்குண்டு எனக் கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐ.பி.எல் போட்டியின் முடிவை முன்னரே நிர்ணயித்த கிரிக்கெட் வீரர்கள், மோடிக்கும் பங்கு"
கருத்துரையிடுக