26 ஏப்., 2010

சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

உத்தரபிரதேசம் மாநிலம் பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், 'மாகுயா' எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.

இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு. போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந்தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக்கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலையை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
dinamalar

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்"

கருத்துரையிடுக