22 ஜூலை, 2010

ஆஃப்கனில் நடைபெற்ற சர்வதேச மாநாடு

காபூல்:ஆஃப்கன் தலைநகர் காபூலில் இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய்,தமது நாட்டு படையினரே ஆஃப்கனிஸ்தானின் பாதுகாப்புப் பொறுப்பையும் 2014 ஆம் ஆண்டுக்கு முன் ஏற்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஆஃப்கனின் 34 மாகாணங்களிலும் பாதுகாப்பு பொறுப்பை அந்தக் காலகட்டத்தில் ஆஃப்கான் பாதுகாப்புப் படையினரே முழுமையாக ஏற்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் எதிர்பார்க்கும் நிலையில், 70 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உதவி மாநாட்டின் இறுதியில் பேசிய ஹமீத் கர்சாய் இவ்வாறு தெரிவித்தார்.

ஆஃப்கனில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக உலகளவில் முக்கியத்துவம் மிக்க ஒத்துழைப்பை வழங்கவும், அமைதியையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்கவும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டின் முடிவில் பேசிய ஐ.நா. சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன், இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மிகவும் முக்கியமானவை என்றார். இந்த காபூல் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் சுமார் 40 பேர் வெளியுறவு அமைச்சர்களாவர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் ஆதரவு தனக்கு கிடைத்திருப்பது குறித்து அங்கு குறிப்பிட்ட ஆஃப்கன் அதிபர் கர்சாய் அவர்கள், எல்லாரும் ஒரு மோசமான பொது எதிரியை எதிர்த்துப் போராடுவதாக கூறினார். ஆஃப்கனிஸ்தானில் ஒரு நல்லாட்சி எற்படவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானுக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

ஆஃப்கனிஸ்தானில் அமெரிக்கா வழங்குகின்ற இராணுவ உதவிக்கு நிகராக பொருளாதார உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நடந்து முடிந்த இந்த சர்வதேச கொடையாளி நாடுகளின் கூட்டத்தின் முடிவில், அந்நாட்டுக்கு வழங்கப்படும் உதவியில் 50 சதவீதத் தொகையை ஆஃப்கன் அரசின் வாயிலாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கனில் நடைபெற்ற சர்வதேச மாநாடு"

கருத்துரையிடுக