1 நவ., 2010

சவூதி அரேபியாவின் மத்தியஸ்தம்: ஈராக்கின் ஷியா பிரிவு நிராகரித்தது

பாக்தாத்,நவ.1:ஈராக்கில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு பரிகாரம் காண்பதற்கு தலையிடுவதாக கூறிய சவூதி அரேபியாவின் வாக்குறுதியை ஈராக்கில் ஷியா கூட்டணியான நேசனல் அலையன்ஸ் நிராகரித்துள்ளது.

ஈராக்கில் நடந்த தேர்தலில் எக்கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் புதிய அரசை உருவாக்குவதில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு பரிகாரம் காண்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுக்க சவூதி அரேபியா அறிவித்த வாக்குறுதியை ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் கட்சிக் கூட்டணி நிராகரித்துள்ளது.

சவூதி மன்னர் அப்துல்லாஹ் இந்த மத்தியஸ்த வாக்குறுதியை முன்வைத்திருந்தார். ஆனால், வெளிநாட்டு தலையீடுக் குறித்து தலைவர்கள் கவலை தெரிவித்ததால் இத்திட்டத்தை புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஈராக்கின் சூழலைக் குறித்து சவூதி அரேபியா வெளிப்படுத்திய கவலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், தேசிய நல்லிணக்கத்தில் ஒன்றிணைய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள். இவ்வாறு நேசனல் அலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையை குர்து கூட்டணியும் வரவேற்றுள்ளது. குர்து கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் 57 இடங்கள் உள்ளன. அனைத்துக்கட்சி அரசு உருவாக்குவதுக் குறித்து மாலிகி பிரிவு குர்து பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேவேளையில், இயாத் அலாவியின் தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணி சவூதிஅரேபியாவின் திட்டத்தை வரவேற்றுள்ளது. ஈராக்கில் பாதுகாப்பு சூழல் மேலும் சீர்குலையாமலிருக்க எல்லா பிரிவினரும் இதனை வரவேற்க வேண்டும் என அலாவி கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் மைசூன் அல்தம்லூஜி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சவூதி அரேபியாவின் மத்தியஸ்தம்: ஈராக்கின் ஷியா பிரிவு நிராகரித்தது"

கருத்துரையிடுக