6 ஜன., 2011

ஏகாதிபத்தியத்திற்கு மனிதநேய முகமூடி

மனித உரிமை ஆர்வலர் மற்றும் சீனாவின் 'பென்' என்ற சர்வதேச எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக திகழும் லியூ ஸியாபோவிற்கு எதிர்ப்பை தெரிவித்ததன் மூலம் அவரை ஒரு தியாகியாக சித்தரிக்கும் முட்டாள்தனத்தை சீனா மேற்கொண்டது.

லியூ ஸியாபோ,அமெரிக்க காங்கிரஸின் கீழ் செயல்படும் ஜனநாயகத்திற்கான தேசிய திட்டத்தின் நிதியுதவியோடு சீனாவில் பணியாற்றி வருகிறார்.

வெளிநாட்டு உதவியுடன் ஜனநாயகத்தையும்,நவீன தாராளமயமாக்கல் கொள்கையையும் பாதுகாக்கவேண்டிய நாடுகளில் நிதியுதவி அளிப்பதற்காக அமெரிக்காவின் அன்றைய அதிபர் ரொனால்ட் ரீகனால் துவக்கப்பட்டதுதான் இத்திட்டம்.

கடந்த 2008 டிசம்பர் மாதம் லியூ ஸியாபோ கைதுச் செய்யப்பட்டதற்கு காரணம் சார்டர் 08 மானிஃபெஸ்டோவுடன் அவருக்கிருந்த தொடர்பாகும். இந்த மானிஃபெஸ்டோ தனி நபர்களின் அரசியல் உரிமைகளைக் குறித்து மீளாய்வுச் செய்வதும், மனித உரிமை தொடர்பான சில வாதங்களை எடுத்துரைப்பதுமாகும். சீனாவில் பொதுத்துறை நிறுவனங்களும், அரசுக்கு சொந்தமான விவசாய நிலங்களும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என சார்டர் 08 கோருகிறது.

அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளுக்கு உகந்த முழக்கங்களாகும் இவை. இத்தகைய கோரிக்கைகளுக்குத்தான் அமெரிக்கா நிதியுதவியும் ஆதரவும் அளித்துவருகிறது. அமெரிக்காவின் அரசியல் ரீதியிலான ஆதரவும் இத்தகைய தனியார் மயமாக்கல் கொள்கைகளுக்குத்தான்.

லண்டன் ரிவியூ ஆஃப் புக்ஸின் வலைப்பூவில், லியூ ஸியாபோவின் அரசியல் நிலைப்பாடுகளைக் குறித்து பெரும்பாலும் ஆதாரங்களுடன் விமர்சிக்கிறார் தாரிக் அலி.

சீனாவை ஏதேனும் ஒரு மேற்கத்திய நாடு குறைந்தது 3 நூற்றாண்டுகளாவது சீனாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சி புரிந்திருந்தால் அந்நாடு ஒரு நாகரீகநாடாக மாறியிருக்கும்! இதுதான் லியூ ஸியாபோவின் முதல் நிலைப்பாடு.

லியூ ஸியாபோவின் இரண்டாவது நிலைப்பாடு - வியட்நாமிலும், கொரியாவிலும் அமெரிக்க தலையீட்டிற்கு காரணம் அந்நாடுகளின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்காக. அதனால், அந்நாடுகளில் அமெரிக்காவின் 'தார்மீக பொறுப்பைக்'குறித்து கேள்வி கேட்கக்கூடாது.

மூன்றாவது நிலைப்பாடு, ஈராக்கின் மீது தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட ஜார்ஜ் புஷ்ஷின் முடிவு சரிதான். இதற்கெதிராக 2004 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜான்கெர்ரியின் விமர்சனம் தவறாகும்.

நான்காவதாக,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தற்போது நடத்திவரும் அடாவடிப் போருக்கு லியூ ஸியாபோவின் பரிபூரண ஆதரவு உண்டு. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் லியூ ஸியாபோவைப் பற்றி ஒருவரின் மதிப்பீடு என்னவாக இருக்கும்?தாரிக் அலி.

நிச்சயமாக லியூ ஸியாபோவிற்கு சொந்த அபிப்ராயங்கள் இருப்பதில் எவ்வித தவறுமுமில்லை என கூறுகிறார். ஆனால், பிரச்சனை என்ன தெரியுமா? இத்தகைய ஒரு நபருக்கா அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது? என்பதாகும். இது மிக கெளரவத்தோடு பரிசீலிக்கவேண்டிய ஒன்று.

இங்கே சம்பவித்தது என்னவெனில், காலனியாதிக்கமும்,அதன் மூலம் ஏகாதிபத்தியம் நடத்திவரும் அட்டூழியங்களும் மனித உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகையதொரு ஏகாதிபத்தியத்திற்கான சேவையைத்தான் லியூ ஸியாபோ ஆற்றிக்கொண்டிருக்கின்றார்.

லியூ ஸியாபோ ஒரு அறிவுஜீவி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால், அவரது கொள்கைகள், நிலைப்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில்தான் எவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவை முற்றிலும் ஒருதலைபட்சமான நிலைப்பாடாகும்.

வரலாற்று உண்மைகளை கண்டும் காணாததுபோல் நடிப்பதும், தனது ஏகாதிபத்திய எஜமானர்களிடமிருந்து கிடைத்த மனித உரிமைகளை மட்டுமே அவர் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால், சீன அரசோ, இவ்விஷயங்களை வெளிப்படுத்த முயலாமல், லியூவை ஜனநாயகத்திற்கான சர்வதேச தியாகியாக மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது.

அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தும் அக்கிரமங்களும், கொரியாவிலும், வியட்நாமிலும் அமெரிக்காவின் தலையீடும் அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகும். இவையெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஒரு சாதனையாகவே மாறியுள்ளது.

ஜனநாயகம்,மனித உரிமையின் பெயரால் எதிரி நாடுகளை தீவிரவாதிகளாகவும்,கொடூரமானவர்களாகவும் சித்தரிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அரசியல் தொடர்பான விவகாரங்களில் இதனை புரிந்துக் கொள்வதற்கான சாதாரண அறிவுகூட லியூ ஸியாபோவிற்கு இல்லாததுதான் கொடுமை!

காலனியாதிக்கம் தவறு எனக் கூறக்கூட அவரால் இயலவில்லை. காலனியாதிக்கம் அடிமை நாடுகளில் நாகரீகத்தை அளித்துள்ளது என தற்போதும் அவர் கூறிக் கொண்டிருக்கின்றார்.

காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் பழைய கருத்துக்களையும், மனித உரிமையின் பெயரால ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் புதிய கருத்துக்களையும் ஒருங்கிணைத்ததுதான் லியூ ஸியாபோவின் அரசியல் கொள்கை.

ஒருவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச தலையீடுகளைக் குறித்து கண்காணித்துவரும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பின் ஆய்வறிக்கையை படிப்பது லியூ ஸியாபோவிற்கு பயனளிக்கலாம்.

ஈராக்கில் சர்வதேச நாடுகளின் தடை அமுலில் இருந்த காலக் கட்டத்தில் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமான சம்பவங்களைக் குறித்து பேசுவதற்கு இந்த மனித நேய ஆர்வலர்கள் வாயை திறக்கமாட்டார்கள். ஈராக்கிலும், ஆப்கானிலும் ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களுக்கு இவர்கள் எவ்வித கண்டனமும் தெரிவிக்கமாட்டார்கள். முன்னர் கொஸோவாவில் ராணுவ தலையீட்டை அங்கீகரித்தார்கள். ஆனால், காங்கோ நாட்டில் நடைபெறும் கொடூரமான நரபலியைக் குறித்து எவ்வித கவலையும் இவர்களுக்கில்லை.

ஆனால், இங்கு சிந்திக்க வேண்டிய காரியம் என்னவெனில் சீனாவில் மனித உரிமைகளுக்கு குறைவில்லை என்பதுதான். சீனாவில் ஆளும் அரசும், தேசிய மற்றும் சர்வதேச முதலாளித்துவ சக்திகளும் அந்நாட்டின் மக்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை நசுக்கி வருகின்றனர். சீனாவில் உழைக்கும் மக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வீதியில் இறங்கிய வேளையில்தான் டியான்மென் சதுக்கத்தில் வைத்து 1989 ஆம் ஆண்டு மாணவர்களை இரத்தம் சிந்தவைத்தது சீன அரசு.

சீனாவில் தொழிலாளிகளின் சமூக-பொருளாதார உரிமைகளைக் குறித்து ஏகாதிபத்திய சக்திகளுக்கோ, பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கோ எவ்வித கவலையும் இல்லை. சீனாவில் தங்களது முதலீடுகளும், லாபமும்தான் அவர்களுக்கு முக்கியம்.

1989 இல் மாணவர்களை சீன அரசு அடக்கி ஒடுக்கிய பிறகுதான் வெளிநாட்டு முதலீடுகள் சீனாவில் வெள்ளம்போல் பாயத் துவங்கியது. ஆனால், லியூ ஸியாபோ தனது ஏகாதிபத்திய எஜமானர்களைப் போலவே சீனாவில் சாதாரண மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்களைக் குறித்து எதுவும் பேசாமல் மெளனம் சாதித்து வருகிறார்.

ஆனால், இந்த அறிவு ஜீவியின் அரசியல் உரிமைகள் குறித்த விமர்சனங்களுக்கு குறைவில்லை. இவ்வாறு விமர்சனம் செய்யாவிட்டால் லியுபோவை சொந்த நாட்டில் யாருக்கு தெரியும்?

நோபல் பரிசு கமிட்டி இம்முறை அமைதிக்கான விருதிற்கு லியு ஸியாபோவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அமைதிக்கான நோபல் விருது பொதுவாகவே சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. வலதுசாரி அரசியல் நிலைபாடுகளும், மேல்தட்டு கனவான்களின் குறுகிய மனப்பான்மையும்தான் இவ்விருதை தீர்மானிக்கின்றன.

மக்களுக்கு சேவை புரிபவர்களும், மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்களும் நோபல் விருது கமிட்டியின் கண்ணில் தென்படமாட்டார்கள்.

கடந்த அரை நூற்றாண்டில் மனித சமூகத்தில் அமைதி தவழவும், சமூக முன்னேற்றத்திற்கும் உண்மையிலேயே பாடுபட்ட ஒரு சிலருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மார்டின் லூதர்கிங்(1967), நெல்சன் மண்டேலா(1993), எல்லைகளில்லாத மருத்துவ உலகம்(1999) ஆகியன இவற்றிற்கு உதாரணங்களாகும்.

ஹென்ரி கிஸிஞ்சர்(1973-வியட்நாமில் அமைதியை ஏற்படுத்த முயற்சி), மெனெச்சம் பிகின்(1978-மேற்காசியாவில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சி), பாரக் ஒபாமா(2009) ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதன் மூலம் நோபல் பரிசு மீதான நம்பிக்கைக்கு களங்கமேற்பட்டது.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஏகாதிபத்தியத்திற்கு மனிதநேய முகமூடி"

கருத்துரையிடுக