21 பிப்., 2011

மும்பை:கசாபுக்கு மரண தண்டனை உறுதியாகுமா​? - இன்று தீர்ப்பு

மும்பை,பிப்.21:மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்ட அஜ்மல் கசாபுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கில் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் மும்பையில் அத்துமீறி புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் பிடிபட்டார். மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அஜ்மல் கசாப் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளில் வழக்கு தொடரபட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து கடந்த மே 6-ம் தேதி கசாபுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக வரைபடம் தயாரித்து உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாவுத்தீன் அஹமது ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

இந்த நிலையில் கசாபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தவும் இந்த வழக்கிலிருந்து இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாவுத்தீன் அஹமது விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் மஹாராஷ்டிர சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுபோல் கசாப் சார்பில் மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி.மோர் ஆகியோர் விசாரித்தனர். இப்போது விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், மும்பை தாக்குதல் அரசு சார்பிலான பயங்கரவாதத்தின் வெளிப்பாடே. இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் உதவியும் நிதியும் அளித்துள்ளனர் என்று என்று வாதிட்டார். கசாபுக்கு மரண தண்டனையை உறுதி செய்ய வகையில் அவர் வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது கசாப் சிலவேளையில் மட்டுமே ஆஜர்படுத்தப்பட்டார். மற்ற விசாரணைகள் விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. கசாப் சார்பில் வழக்கறிஞர் சோல்கர் வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையை ஒட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மும்பை:கசாபுக்கு மரண தண்டனை உறுதியாகுமா​? - இன்று தீர்ப்பு"

கருத்துரையிடுக