4 மார்., 2011

வரலாற்றுக்கு வரைவிலக்கணம் வகுத்த வல்லோனின் இறுதித்தூதர்

(ரபியுல் அவ்வல் மாதத்தின் இறுதியில் நாம் அமர்ந்திருக்கிறோம். இம்மாதம் உலகிற்கு அருட்கொடையாய் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் பிறந்த மாதமாகும்.

ஒரு உண்மையான முஸ்லிம் தனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நபிகளாரை நினைவுக் கூறத்தான் செய்கிறார். ஆனால், நாம் ஏற்றுக்கொண்ட கொள்கையை நமக்கு அறிமுகப்படுத்திய அந்த லட்சியத் தூதரை இன்றைய உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

"என்னைக் குறித்து அறிவியுங்கள். அது சிறியதோர் செய்தியாயினுஞ்சரியே." அறிவிப்பவர்: இப்னு அம்ர்(ரலி...) நூல்: புகாரீ. அதனடிப்படையில் இக்கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. )

இவ்வுலகில் பல்வேறு மதங்களும், இயக்கங்களும் தோன்றியுள்ளன. அவையெல்லாம் அவற்றை தோற்றுவித்தவர்களையும், தலைவர்களையும் மிகைப்படுத்தி சித்தரிப்பது வழக்கமான ஒன்றாகும். வர்ண தூரிகைகளால் வரைக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கை சித்திரங்கள் சில வேளைகளில் சாதாரண மக்களின் உள்ளங்களில் வீராவேசத்தையும், உணர்ச்சிகளையும் ஊட்டுவதற்கு உபயோகமாகலாம். ஆனால், அந்த தலைவர்கள் யார்? அவர்கள் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது குறித்து பாரபட்சமற்ற தேடுதல்களுக்கான முயற்சிகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவதில்லை.

மேற்கூறிய மிகைப்படுத்தலை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது(ஸல்...) அவர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும். மனித குலம் முழுவதும் ஒரே தாய், தந்தையின் மூலமாகத்தான் உருவானது என்பதை உணர்ந்து அனைத்து மனிதர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே தலைவர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் மட்டுமே. நபிகளாரை திருக்குர்ஆன் சிறப்பித்துக் கூறுவது அவர் அரபிகளின் நபி என்றோ அல்லது முஸ்லிம்களின் நபி என்றோ அல்ல. மாறாக உலக முழுமைக்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்றே பிரகடனப்படுத்துகிறது.

"இன்னும்,(நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.)" (அல்குர்ஆன் 34:28).

புவியியல் ரீதியான எல்லைகளோ அடையாளங்களோ இறைத்தூதரை கட்டுப்படுத்தவில்லை.

முஹம்மது நபி(ஸல்...) அவர்களுக்கு முந்தைய நபிமார்களின் இலட்சியப்பணி அடிப்படையில் மனித சமூகத்திற்கு பொதுவானதாக இருந்தாலும், அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ இலக்காகக் கொண்டே தங்களின் பணியை ஆற்றினர். முஹம்மது நபி(ஸல்...) அவர்களுக்கு பின்னால் வந்த வரலாற்றில் வீரப்புருஷர்களாக சித்தரிக்கப்படுவோரெல்லாம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் தங்களது இலக்காக கொள்ளவில்லை. மாறாக தொழிலாளி-முதலாளித்துவ பிரிவினருக்கோ, மொழி-இன வகுப்பினருக்கோ, சிறுபான்மை-பெரும்பான்மை இனத்தவருக்கோ பிரதிநிதிகளாகத்தான் விளங்கினார்கள். உதாரணமாக கார்ல் மாக்ஸை எடுத்துக் கொள்வீர்களானால், அவர் பொருளாதார சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர் என்பதைத் தவிர வேறு எதனையும் அவர் இவ்வுலகிற்கு விட்டுச் செல்லவில்லை. இங்கேதான் நபி(ஸல்...) அவர்கள் இவ்வுகில் முன்வைத்த கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நபிகளார் பேணிய தொலைநோக்கு பார்வைதான் சமூகத்தின் அனைத்து பிரிவனர்களையுமே தனது தோழர்களாக மாற்ற அவர்களுக்கு துவக்கத்திலேயே உதவியது.ரோம நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவராகயிருந்த சுஹைப், நெருப்பை வணங்குபவராகயிருந்த பாரசீகத்தைச் சார்ந்த ஸல்மான், நீக்ரோ அடிமையாகயிருந்த பிலால், மேல்தட்டு பிரமுகர்களான அபூபக்கர், உமர், வணிகர்களான அப்துற்றஹ்மான் இப்னு அவ்ஃப், உஸ்மான், வறியவர்களான அபூதர், அபூஹுரைரா, இளைஞரான அலீ, நல்லொழுக்க பெண்மணி கதீஜா, மக்காவைச் சார்ந்த முஹாஜிர்கள், மதீனாவைச் சார்ந்த அன்சாரிகள் என சமூகத்தின் மாறுபட்ட துறையைச் சார்ந்தவர்களெல்லாம் நபியவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி இஸ்லாத்தின் பிரதிநிதிகளாக மாறிய நிகழ்வுகளை நாம் வரலாற்றில் காண இயலும். மிகைப்படுத்தல் இல்லாத முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் களங்கமற்ற தூய வாழ்க்கை யாரைத்தான் ஈர்க்கவில்லை?

சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரைப் போலவே பல்வேறுப்பட்ட நபர்களின் குணநலன்களை தமது சித்தாந்தத்தால் உடைத்தெறிய முடிந்தது முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் மற்றொரு சாதனையாகும். மதுபானத்தையும், பெண்களையும் தங்களது வாழ்க்கையின் உயர்ந்த லட்சியமாக கருதிய ஒரு மக்கள் கூட்டத்தை பரிசுத்தமான வாழ்க்கையின் உன்னத முன்மாதிரிகளாக மாற்றிய நிகழ்வுகளை நபிகளாரின் வாழ்க்கையைத் தவிர சரித்திரத்தின் வேறு எந்த பக்கங்களிலும் நாம் பார்க்கவியலாது.

நபிகளாரின் இத்தகைய தோழர்களை அவர்களின் எதிரிகள் கூட புகழ்ந்த உண்மையை நாம் எடுத்துக்காட்டியாக வேண்டும். பகலில் ஆவேசமாக போராடும் வீரர்கள், நடு இரவிலோ இறைவனின் வழிப்பாட்டில் திளைத்தவர்களாக சின்னக் குழந்தைகளைப் போல் தேங்கி அழுபவர்கள் என எதிரிகள் பாராட்டுகின்றார்கள். 'பரிபூரணமான மனிதர்கள்' என தத்துவஞானிகள் நபித் தோழர்களைப் பற்றி குறிப்பிட்டதும் அவர்களின் வாழ்க்கை பரிசுத்தத்தின் காரணமாகத்தான். தான் எடுத்துவைத்த சித்தாந்தத்தை நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாக்கி சரித்திரம் படைத்த அந்த வீரப் புருஷர்களைப் பற்றி நபிகளார் குறிப்பிடும்பொழுது, "எனது தோழர்களை திட்டாதீர்கள் ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது. அறிவிப்பவர்:அபூஸயீத் அல்குத்ரி(ரலி...) நூற்கள்:புஹாரி, முஸ்லிம்.

"இஸ்லாத்தில் நபியவர்களுக்கு அடுத்ததாக வழங்கப்படும் சிறப்பு நபித் தோழர்களுக்குத்தான். பிற்காலத்தில் தோன்றியவர்கள் எவ்வளவு பெரிய அறிவுஜீவியாக போற்றப்பட்டாலும் அவர்களெல்லாம் நபித் தோழர்களின் பதவியை எட்டிப்பிடிக்க இயலாது.

மனித சமூகத்தின் புனரைமைப்பு என்பது உண்மையானால் அதன் சிற்பி நபி(ஸல்...) அவர்களைத் தவிர வேறு எவருமில்லை. வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் தலையிட்டு அதில் பலவற்றை புனரைமைத்தார்கள். சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை ஒரே இறைவனுக்கு அடிமைகளாக மாற்றிக் காட்டினார்கள். கோத்திர, குல பெருமைகளிலும், மது, மாது, வட்டி போன்ற சமூக சீர்கேடுகளில் கட்டுண்டு கிடந்த சமூகத்தை உன்னதமிக்க ஒழுக்கமுடைய சமூகமாக மாற்றிய பெருமை நபிகளாருக்கு உண்டு. இன்று அத்தகைய சீரழிவுகளில் சிக்குண்டிருக்கும் உலகில் நபி(ஸல்...) அவர்களின் முன்மாதிரி எவ்வளவுதூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவர்களின் வாழ்க்கையை படித்தவர்களுக்கு புரியும். உலகம் மதுவில் மூழ்கிவிடிமோ என அஞ்சும் மனித சமூகத்தின் மீது கவலைக் கொண்டவர்களுக்கு நபிகளார் கூறிய வார்த்தைகள்தாம் நமது நினைவுகளில் நிழலாடுகிறது.

மனித சமூகத்தை மட்டுமல்ல இயற்கையைக் கூட நபி(ஸல்...) அவர்கள் எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்பதற்கு அவர்களது வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகள் கிடைக்கும். இயற்கையை பசுமையாக மாற்றும் மரங்களை போர் வேளைகளில் கூட வெட்டக்கூடாது என உத்தரவிட்டார்கள். மனிதர்களின் எல்லைக் கடந்த பேராசை உயிரினங்கள் மற்றும் இயற்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் பொழுது நபி(ஸல்...) அவர்களின் பார்வையை மாபெரும் எச்சரிக்கையாக நாம் கருதவேண்டும்.

அர்த்தம் பொதிந்த நபி(ஸல்...) அவர்களின் பொன்மொழிகளை நாம் ஆராயும் பொழுது நபிகளார் அரபு மொழியில் மிகச்சிறந்த கவிஞரா? என எண்ணத் தோன்றும். அவ்வளவு தூரம் தெளிவான, கச்சிதமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. ஆனால், நபி(ஸல்...) அவர்கள் தன்னை கவியாக கருதவோ, வார்த்தைகளை கவிதையாக மாற்றவோ செய்யவில்லை. நபி(ஸல்...) அவர்களை கவிஞரல்ல எனக் கூறுகிறது திருக்குர்ஆன். ஆனால், நபிகளாரின் வார்த்தைகளில் இலக்கிய நயமும், வலிமையும், அழகும், எளிமையும், தீவிரமும் நிறைந்து காணப்படுகின்றன. மனித சமூகத்தின் உயிர்த்தெழலுக்கு இந்த வார்த்தைகளை விட வேறொன்றையும் உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை. இனியும் காணமுடியாது.

நபி(ஸல்...) அவர்கள் விட்டுச்சென்ற சித்தாந்தத்தின் தொகுப்பை எக்காலத்திற்குமான விடுதலைக்கான இயக்கமாக அறிமுகப்படுத்துவதற்கு நம்மால் இயலவேண்டும். எந்த சவால்களையும் உறுதியுடன் எதிர்கொண்டு காலச்சூழலுக்கு ஏற்றவாறு வழிகாட்டும் சித்தாந்தமாக இந்த நவீனயுகத்தில் இஸ்லாம் அங்கீகரிக்கப்பட நாம் முயலவேண்டும்.

மேற்கத்திய உலகம் இவ்வுலகிற்கு அளித்த தத்துவங்களெல்லாம் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவி வருகின்றன. உலகில் அனைத்து மனிதர்களுக்காகவும் இறைவன் அருளிய செல்வங்கள் ஒரு சிலர் மட்டும் அனுபவிக்க வழிவகுக்கும் முதலாளித்துவக் கொள்கையினால் உலகம் மிகுந்த நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடுகளின் வளங்களின் மீது நோட்டமிட்டு அந்நாடுகள் மீது அக்கிரமமான தாக்குதல்களை முதலாளித்துவ நாடுகள் கட்டவிழ்த்து விடுகின்றன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முதலாளித்துவக் கொள்கையினால் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

முதலாளித்துவக் கொள்கைக்கு மாற்றீடாக வந்த மார்க்ஸிஸம் காலத்தின் கல்லறைக்குள் முகங்குப்புற வீழ்ந்துக் கிடக்கிறது. கியூபாவிலும், வடகொரியாவிலும் அக்கொள்கை ஒதுங்கிவிட்டது. சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்கான நீதியின் தத்துவம் இஸ்லாம்தான் என்பதை உலகிற்கு எடுத்துக்கூற வேண்டிய சூழல் இது. மார்க்ஸிஸம் இறைவனை மறுத்தாலும், மனிதநேயத்துடன் நடந்துக்கொள்வதாக சிலர் கருதுகின்றனர். அதனால்தான், மார்க்ஸிஸத்தின் வீழ்ச்சி ஏற்படுத்திய வெற்றிடத்தில் சிக்குண்டிருப்பவர்கள் நடுநிலையான சிந்தனையுடைய, மனிதநேய ஆர்வலர்களாவர். அவர்களின் முன்னால் நடுநிலையாகவும், மிகைப்படுத்தாமலும் நபி(ஸல்...) அவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அதாவது இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். ஏனெனில் நபி(ஸல்...) அவர்கள் எடுத்துவைத்த கொள்கை சமூகத்தின் சிந்தனையையும், பார்வையையும், பிரச்சனையை அணுகும் முறையையும் மாற்றிக்காட்டியது. குணநலன்களை மதிப்பீடுச் செய்யும் முறையையும் நவீனமாக்கியது. வாழ்க்கையின் தரம் தனித்தன்மை வாய்ந்ததாக மாறியது. சுருக்கமாக கூறவேண்டுமெனில், ஒட்டுமொத்த சமூகத்தின் மொத்த வடிவமே முற்றிலும் மாற்றப்பட்டது. அத்தகைய மாற்றம் இவ்வுலகிற்கு இன்றும், என்றும் தேவையான ஒன்றாகும்.

நபி(ஸல்...) அவர்களை நாம் மிகவும் நேசிக்கிறோம் என்பது உண்மையானால் அவர்கள் கொண்டுவந்த கொள்கையை துணிவுடன் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு நம்மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து நாம் செயல்படுவோம்.
ASA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வரலாற்றுக்கு வரைவிலக்கணம் வகுத்த வல்லோனின் இறுதித்தூதர்"

கருத்துரையிடுக